வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி.. புதுவையில் சோகம்
புதுவை: புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி காயத்ரி பலியாகிவிட்டார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் குருமாம்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காயத்ரி (19). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் கல்லூரி மாணவி காயத்ரிக்கு டெங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காயத்ரி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.
இந்த மாணவி டெங்கு காய்ச்சலால் இறந்தார் என மருத்துவ அறிக்கை கூறியுள்ளது. ஆனால் இவருக்கு டெங்கு காய்ச்சலுடன் இதய நோய் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் அவர் உயிரிழக்க காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
இவர் வெளியூரில் படித்து வந்தாரா இல்லை புதுவையிலேயே கல்லூரியில் படித்து வந்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு 1200- க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து ஒரு வாரமாக தேங்கியிருக்கும் நல்ல நீரில் உருவாவதுதான் ஏடீஸ் கொசுக்கள். இந்த கொசுக்கள் பகலில் கடித்து டெங்கு காய்ச்சலை பரப்பும். இதனால் பூத்தொட்டிகள், டயர்கள், ஆட்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications