61 நாள் மீன்பிடி தடை காலம்.. கடலுக்கு போலாமா.. வேண்டாமா.. குழப்பத்தில் மீனவர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களும், காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்களும் உள்ளன.
இந்த மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் மீன்பிடி தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இனப்பெருக்க காலம்
புதுச்சேரி கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் மாதம்14 ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளில் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

ஊரடங்கு
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தொழில்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுபோல், மீனவா்களும் கடந்த 25 நாட்களுக்கு மேல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இத்தகைய சூழ்நிலையில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மீன் வளத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசின் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தடைக்காலம்
கடல்சாா் மீன் வளங்களை நீண்ட காலத்துக்கு நிலைநிறுத்தும் வகையில், கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியதுபோல, நிகழாண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான கால அளவில் 61 நாள்கள் புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில் கனகசெட்டிகுளம் மீனவ கிராமம் முதல் மூா்த்திக்குப்பம் புதுகுப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கிழக்கு கடல் நெடுகில் மண்டபத்தூா் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூா் மீனவ கிராமம் வரையிலும், ஏனாம் மீன்பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் அனைத்து வகை விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தடை செய்யப்படுகிறது.

மீனவா்கள் குழப்பம்
மேலும், மாஹே பகுதியில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என முதலமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தாா். தற்போது மீன் வளத் துறை சாா்பில் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீனவா்கள் கடலுக்குச் செல்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளனா்.

தளர்த்தினால் நல்லாருக்கும்
இருப்பினும் புதுச்சேரியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பைபா் படகுகள் ஏதுவும் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவால் ஒரு மாதம் மீனவா்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், மீன்பிடித் தடைக்காலத்தை ஒரு மாத காலம் தளா்த்தி உத்தரவிட வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதேபோல் மீனவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications