பப்பில் குடித்துவிட்டு பயங்கர ரகளை.. டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்துக்கு புதுவை போலீஸ் வலை
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் தகராறு செய்த பிரபல யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Recommended Video
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ளது ஏகே டார்வின் உணவகம். இந்த உணவகத்தில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத், அவரது நண்பர்களான ஜெயராம் மற்றும் தாமு ஆகிய 3 பேர் வந்தனர்.
அப்போது அந்த ஹோட்டலில் உள்ள PUB-ல் மது அருந்த வந்ததாக கூறப்படுகின்றது . அவர்கள் வந்ததில் இருந்து ஊழியர்களை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஆட்டை கிழித்து.. கடல் உணவுகளை உள்ளே வைத்து.. தைத்த வில்லேஜ் குக்கிங் சானல் குழு.. வீடியோ வைரல்
ஊழியர்
இந்நிலையில் இரவு 11 மணி ஆகிய பின்பும் அவர்கள் மது கேட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர் 11 மணிக்கு மேல் மது தர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கோபிநாத் அந்த ஊழியர் ஜார்ஜஸ் சினாஸை கடுமையான வார்த்தைகளால் திட்டி, எனக்கே தர மாட்டாயா என கேட்டு பீர் பாட்டிலை உடைத்துள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் உள்ள பொருட்களை சூறையாடி மூவரும் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
ரகளை சம்பவம்
பின்னர் வாக்குவாதத்திலும் கோபிநாத் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த ரகளை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார்.
வீடியோ வைரல்
இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களை எச்சரித்த போலீஸார் காவல்நிலையத்திற்கு வரசொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுளள்னர். அவர்கள் காவல் நிலையம் வரவில்லை. இதனை அடுத்து தனியார் ஹோட்டல் ஊழியர் ஜார்ஜஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
3 ஹோட்டல்கள்
டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் பேக்டரி எனும் யூடியூப் சேனல் மூலம் குக்கிங் வீடியோ உலகளவில் பிரபலம். இதை முறையாக கொண்டு சென்றவர் அவரது 32 வயதாகும் மகன் கோபிநாத். இந்த சேனலை 4.62 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த டாடி ஆறுமுகம் மதுரை, புதுவையில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். தற்போது டாடி ஆறுமுகம் என்ற பெயரில் புதுச்சேரியில் மூன்று இடங்களில் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதுவை உணவகத்தை கோபிநாத் நடத்தி வருகிறார்.