பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம்.. முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
புதுச்சேரி:புதுச்சேரியில் பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக கூறினார்.

இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதியில் வசித்தவருக்கு கொரோனா வைரஸ் குணமானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி நாளை (ஏப்ரல் 19) முதல் சகஜமான பகுதியாக மாற்றப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு கட்டுமானப் பணிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ள நிலையில், கட்டுமானப் பொருட்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் தொழில் முடங்கும். எனவே, கட்டுமானப் பொருட்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க, மத்திய உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன் எனக் கூறினார்.
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்க நாம் கடும் முயற்சி எடுத்து வருகிறோம். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதமும், தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் வழக்கும் பதிவு செய்து வருகிறோம். இதேபோல பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் 20 ஆம் தேதிக்கு பிறகு ஓட்டல்கள் இயங்கலாம். ஆனால் அமர்ந்து உணவருந்த அனுமதியில்லை எனக் கூறிய அவர், இறைச்சிக் கடைக்காரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன என்றும் அப்படி தொடர்ந்தால், அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

மஞ்சள் அட்டைதாரர்கள் அரிசி வழங்குவதற்கான படிவம் ஒன்றை புதுச்சேரி அரிசின் மீது களங்கம் விளைவிக்கும் எண்ணத்தில் யாரோ பரப்பி வருவதாகவும், இது போன்ற எந்த மனுவும் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் வெளியிடப்படவில்லை எனவும் தெளிபடுத்தினார். மேலும், இது போல வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்தார்.











Click it and Unblock the Notifications