புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு.. ஆனால் சரக்கு வாங்கலாம்.. இதெப்படி இருக்கு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை முதல் அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகளை மூட முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாளை முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாவும், மொத்தம் மற்றும் சில்லறை மது விற்பனைக்கு எந்தவித தடையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் உத்தரவை மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாஹே பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் தானும், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் மாஹே பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரியில் பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் எல்லைப் பகுதிகளில் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவதில்லை. பெயரளவிற்கு மட்டுமே இந்த பகுதிகளில் மருத்துவர்கள் முகாமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தீவிரத்தை மாநில அரசு உணர்ந்துகொண்டு முறையாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
முன்னதாக நேற்று நாராயணசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது மது பார்களை மூட வேண்டாம் என்று 2 அமைச்சர்கள் கெஞ்சலாக அவரிடம் கூறினர். அதைக் கேட்ட நாராயணசாமி, ஏன் உங்களுக்கு சொந்தமா பார் இருக்கா என்று கலாய்த்தார். ஆனால் இன்று அமைச்சர்களின் வேண்டுகோளை சூப்பராக நிறைவேற்றி அவர்களுக்கு சியர்ஸ் சொல்லி விட்டார்!












Click it and Unblock the Notifications