புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா.. வெளிநாடுகளிலிருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரால் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குருமாம்பேட் பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல் வெளிநாட்டிலிருந்து புதுச்சேரி மகாவீர் நகர் பகுதிக்கு வந்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
காரைக்காலில் ஒருவரும், மாஹேயில் இரண்டு பேரும், கண்ணூரில் ஒருவரும் என மொத்தம் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தற்போது ஜிப்மரில் இரண்டு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா புதிதாக பாதிக்கப்பட்டதில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். அவர்கள் நேராக மருத்துவமனைக்கு வந்தனர். குரும்பாபேட் பகுதியைச் சேர்ந்தவர் மளிகை கடை வைத்துள்ளவரின் மகன். எனவே அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பூர்விகப்பகுதிக்கு வரவேண்டும் என்று வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்களது விவரம் சரியாக தெரியவில்லை. இதனால் அவர்களது விவரத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவர். அதன்பின்னரே அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இனிமேல் புதுச்சேரிக்கு கடுமையான காலம்.
எனவே பொதுமக்கள் முன்பைவிட கூடுதல் ஒத்துழைப்புதர வேண்டும். மேலும் அதிகாரிகளும் முன்பைவிட கூடுதலாக பணியாற்ற வேண்டும். சிங்கப்பூரிலிருந்து வந்த ஏனாமைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் பெங்களூருவில் உள்ளார். அவரை ஏனாமுக்கு அழைத்து வரவேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் அவரை அழைத்து வருவது நல்லதல்ல என்று தெரிவித்து வருகின்றேன் என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications