ஓடி ஒளிந்து..! சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்.. புதுவையில் கைதான கனல் கண்ணன்..ஆக.26 வரை சிறை
சென்னை: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து புதுவையில் தலைமறைவாக இருந்த அவரை சென்னை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். புதுச்சேரி விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீஸ் கைது செய்து சென்னை அழைத்து வந்தது. புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை எழும்பூர் கோர்ட்டில் சைபர் கிரைம் போலீஸ் ஆஜர்படுத்தியது. ஆகஸ்ட் 26ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாட்டிக்கிட்டாரே! அதிகாலையே கனல் கண்ணனை கண்டுபிடித்த போலீஸ்.. புதுச்சேரியில் தட்டி தூக்கியது எப்படி?
பக்தர்கள்
பக்தர்கள் கோயிலுக்குள் உள்ளே செல்லும் வழியில் கடவுளே இல்லை என சொன்ன பெரியாரின் சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என கூறியிருந்தார். பெரியார் குறித்து அவதூறாக பேசிய கனல் கண்ணனின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது.
கனல் கண்ணன்
கனல் கண்ணனுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சென்னை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி எஸ் அல்லி விசாரணை நடத்தினார். அப்போது மனுதாரர் கனல் கண்ணன் தரப்பில் முன் வைத்த வாதத்தில் சிலையை உடைக்கப் போவதாகக் கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்றும் தான் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தவிர வேறு எந்த குற்றத்தையும் செய்யவில்லை என வாதம் முன் வைக்கப்பட்டது.
Recommended Video
கனல் கண்ணன் கைது
இந்த வாதத்திற்கு மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி தேவராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மனுதாரர் கனல் கண்ணன் பேசிய பேச்சுகள் வைரலாகியுள்ளது. அவருக்கு முன் ஜாமீன் தரக் கூடாது என வாதிட்டார். இதையடுத்து இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் கனல் கண்ணன் எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை தேடி வந்த நிலையில் புதுவையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.