புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பரிந்துரை.. இன்றே அமலாகிறது?
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் சட்டசபையில் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
எனவே கடந்த 22ம் தேதி நாராயணசாமி ஆட்சி கலைந்தது.

ஆட்சிக்கு உரிமை
இதையடுத்து, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் ஆட்சியமைக்க முன்வருமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமைகோரவில்லை. இதற்கு முக்கிய காரணம், இன்னும் 10 நாட்களில் அங்கு தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்பதுதான். 10 நாட்களுக்கு ஆட்சியில் இருப்பதை எந்த கட்சியும் விரும்பவில்லை.

பாஜக திட்டம்
நமச்சிவாயத்தை முதல்வராக நியமித்து, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கலாமா என்ற யோசனை இருந்ததாம். ஆனால் ஆட்சியை கலைத்துவிட்டு, அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள் என்ற கெட்ட பெயர் பாஜகவுக்கு வந்துவிடும் என்பதால் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

தமிழிசை பரிந்துரை
இந்த நிலையில்தான், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு துணை நிலை ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் இன்று உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் அரசு செலவீனங்களுக்கு ஒப்புதல் பெற பட்ஜெட் கூட்டம் நடைபெறும். புதுச்சேரியில் அரசு இல்லாததால் இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைதான் வழங்க வேண்டும். எனவே குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், மத்திய அமைச்சரவையில் செலவீனங்களுக்கு ஒப்புதல் பெற வசதியாக இருக்கும்.

30 வருடங்களுக்கு பிறகு
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. எனவேதான் இன்று குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த தமிழிசை பரிந்து்ரை செய்துள்ளார் என்கிறார்கள். இன்று மதியமே, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவது தொடர்பான உத்தரவு வெளியாக வாய்ப்பு இருக்கிறதாம். இதன் மூலம், 30 வருடங்களுக்கு பிறகு, புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலாக உள்ளது.

குடியரசு தலைவர் ஆட்சி
குடியரசு தலைவர் ஆட்சி என்பது மத்திய அரசு அதிகாரத்தை செலுத்த முடியும் என்பதற்கான அர்த்தம்தான். எனவே, தேர்தல் நடைபெறும் வரை, மத்திய அரசு மூலம் புதுச்சேரியில் நலப் பணிகள் பலவும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications