மருத்துவமனையில் இருந்து தனது குழந்தையை தூக்கிகொண்டு 22 கி.மீ நடந்தே வீட்டிற்கு சென்ற பெண்!
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு சிகிச்சை முடிந்த நிலையில், தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு செல்ல குழந்தையை தூக்கிகொண்டு 22 கி.மீ தூரம் நடந்தே சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடுமுழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் விமானம், ரெயில்கள், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட மக்களின் பொது போக்குவரத்து அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுகாதாரத் துறை பணியாளர்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான போக்குவரத்து தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.

விழுந்து அடிபட்ட குழந்தை
இந்நிலையில் பேருந்து சேவை முடங்கியுள்ளதால், கள்ளகுறிச்சியை சேர்ந்த பெண் ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த தனது குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல 22 கி.மீ நடந்தே சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி தீபா (22). இந்த தம்பதியின் ஒரு வயது மகள் ஜஸ்மிதா, கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருக்கும்போது, திடீரென கீழே விழுந்துவிட்டாள்.

ஜிப்மர் மருத்துவமனையில்
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஜஸ்மிதாவை, அவரது தாய் தீபா மட்டும் உடன் தங்கி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குழந்தை குணமடைந்ததை தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் தராத ஜிப்மர்
ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து வசதியில்லாததால் செய்வதறியாது தவித்துள்ளார் தீபா. மேலும் ஜிப்மர் நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் உதவி கேட்டும், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து நடந்தாவது வீட்டிற்கு சென்றுவிட வேண்டுமென முடிவு செய்த தீபா, தனது குழந்தையை தூக்கிகொண்டு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார்.

22 கிலோமீட்டர் நடந்தே போனார்
அப்போது 22 கி.மீ தொலைவில் மதகடிப்பட்டு பகுதியில் தீபா கை குழந்தையுடன் நடந்து வருவதை பார்த்த ஒருவர், அவர்கள் இருவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இறக்கிவிட்டுள்ளார். பின்னர் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நடந்து செல்லலாம் என முடிவெடுத்த தீபா, தனது குழந்தையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார். அப்போது விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நடந்து வந்துகொண்டிருந்த தீபாவிடம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்துள்ளனர்.

போலீஸாரின் உதவி
இதனை தொடர்ந்து தீபாவிற்கு உதவி செய்ய எண்ணிய போலீசார், தங்கள் கையில் இருந்த பணத்தை சேகரித்து, வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த கார், ஓட்டுநரும் தனது காருக்கு வாடகை தேவையில்லை, டீசல் மட்டும் போதும் என கூறி, தீபாவை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டுபோய் சேர்த்துள்ளார். தீபாவும் கண்ணீர் மல்க தனக்கு உதவி செய்த, காவலர்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா வைரசால், ஆங்காங்கே மனிதம் இன்னும் இருக்கிறது என்பதை பல்வேறு வழிகளில் நாள்தோறும் காண முடிகிறது.












Click it and Unblock the Notifications