ஒட்டுமொத்த சுற்றுலா தலங்களும் மூடல்.. வெறிச்சோடி காணப்படும் புதுச்சேரி..!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலாத் தளங்கள் அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். படகு இல்லம், பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி இன்றுமுதல் பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், பெரிய வணிக நிறுவனங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான நோணாங்குப்பம் படகு இல்லம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை வரும் 31 ஆம் தேதி வரை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனிடையே அரவிந்தர் ஆசிரமத்திற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரம உறுப்பினர்கள், ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள், ஆசிரம பாஸ் வைத்துள்ளவர்கள், தினசரி வந்து செல்லும் பக்தர்கள் மட்டும் ஆசிரமத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், ஆசிரம கட்டிடம், விளையாட்டு திடலில் நடைபெறும் மாலை நேர தியானம் ரத்து செய்யப்படுவதாக அரவிந்தர் ஆசிரம நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் விமானம் மூலம் வருவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளதால், பெங்களூர் - புதுச்சேரி புதுச்சேரி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.