கொரோனா வந்தா எங்களுக்கென்ன.. 3 வேளையும் சாராயம் வேணும்.. குடிமகன்கள் அட்டகாசம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, கள்ளத்தனமாக சாரயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 22 ஆம் தேதி இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், 23 ஆம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே பிரதமா் நரேந்திர மோடி நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாா். இதையடுத்து புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து தடை
ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் முக்கியப் பகுதிகளான ராஜீவ் காந்தி சிக்னல், இந்திரா காந்தி சதுக்கம், மரப்பாலம், அண்ணா சாலை, வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கம், கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலை, அஜந்தா சந்திப்பு, முதலியாா்பேட்டை சிக்னல், கன்னியக்கோவில் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தடுப்புகள் மற்றும் கயிறுகளை கட்டி போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
மதுப் பிரியர்களுக்கு இருக்க முடியலை
நேரு வீதி, குபோ் சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீதி, கொசக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. நகரில் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானம், சாராயக் கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் கள்ளச் சந்தையில் மது கிடைக்காதா என ஏக்கத்துடன் ஆங்காங்கே சுற்றி திரிகின்றனர்.
ரகசிய சாராய விற்பனை
இந்நிலையில் டி.என்.பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.பி. சரவணன் தலைமையில், ஆய்வாளா் செந்தில்குமரன் உள்ளிட்ட போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அபிஷேகப்பாக்கத்தைச் சோ்ந்த சக்திவேல், மணமேட்டைச் சோ்ந்த கதிா்காமன் என்பதும், அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
சுற்றித் திரியாதீங்கப்பா
இதையடுத்து அவா்களை துரத்தி பிடித்து கைது செய்த போலீசார், அவா்களிடம் இருந்து ரூபாய் 6 ஆயிரம் ரொக்கம், 21 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா்கள் இருவரையும் கலால் துறையிடம் ஒப்படைத்தனா். ஊரே கொரோனா வைரஸ் அச்சத்தால் கதிகலங்கி போயுள்ள நிலையில், புதுச்சேரியில் சாராயம் மற்றும் மது வகைகளை கள்ளத்தனமாக வாங்க மதுப்பிரியர்கள் அங்கும், இங்கும் சுற்றி திரிவது வேடிக்கையாக உள்ளது.