உடனே டெல்லிக்கு வாங்க! டாப் அதிகாரிக்கு பறந்த ஆர்டர்! மத்திய உள்துறை அதிரடி! பின்னணியில் அந்த கடிதம்
புதுச்சேரி: புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லிக்கு சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில்தான் புதுச்சேரி அரசியலில் முதல் அதிரடி மாற்றம் நடைபெற்று உள்ளது. ஆனால் இதற்கு பின் வேறு ஒரு கடிதம் இருப்பதாக கூறப்படுகிறது.. அப்படி புதுச்சேரியில் என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்!
தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார்.
இதில் பல்வேறு விஷயங்கள் பற்றி தமிழிசை டெல்லியில் புகார் வைத்ததாக கூறப்பட்டது. அதன்படி தெலுங்கானாவில் ஆளும் கே சந்திரசேகர ராவ் அரசு தனக்கு போதிய மரியாதையை அளிக்கவில்லை என்று தமிழிசை புகார் வைத்ததாக கூறப்பட்டது.
“24 மணி நேரம் கெடு” தைரியம் இருந்தால் என்னை மோடி கைது பண்ணட்டும்! நேரடி சவால் விட்ட சந்திரசேகர ராவ்
தமிழிசை
எனக்கு ஆளுநர் பதவிக்கு உண்டான மரியாதை அளிக்கப்படவில்லை. நான் செல்லும் இடங்களில் என்னை வரவேற்க கூட ஆட்கள் இல்லை. ஆட்சியர் வரவில்லை. ஒரு எஸ்பி ரேங்கில் இருக்க கூடிய அதிகாரி கூட என்னை வந்து சந்திக்கவில்லை என்று தமிழிசை புகார் வைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கானாவில் போதை பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் தமிழிசை புகார் வைத்தார்.
புதுச்சேரி
இந்த நிலையில்தான் புதுச்சேரி அரசியல் விவகாரம் குறித்தும் தமிழிசை புகார்களை அடுக்கியதாக கூறப்படுகிறது. புதுச்சேரியின் முதல்வர் ரெங்கசாமி தரப்பிலிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு இல்லை என்று தமிழிசை புகார் அளித்ததாக தகவல்கள் வந்தன. அதாவது புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக தனக்குத்தான் அதிக அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அங்கே தன்னை கண்டுகொள்ளவில்லை என்று தமிழிசை புகார் வைத்ததாக கூறப்படுகிறது.
தலைமை செயலாளர்
தலைமைச் செயலாளரிடம் இது பற்றி நான் கேள்வி எழுப்பினால், "பாஜகவின் சீனியர் அமைச்சர் நமச்சிவாயம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாரே... என அலட்சியமாக சொல்கிறார்கள் ஆளும் கூட்டணியில்" என்று தமிழிசை புகார் வாசித்து இருக்கிறாராம். இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் முதல்வர் ரங்கசாமி இன்னொரு கடிதம் ஒன்றை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறாராம்.
கடிதம்
அதில், தலைமை செயலாளரை மாற்றம் என்று அவர் குறிப்பிட்டு டெல்லிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வினி குமார் முட்டுக்கட்டையாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமி கருதியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ரங்கசாமி கோரிக்கை உடனே ஏற்கப்பட்டு அவர் திரும்ப பெறப்பட்டு உள்ளார். உடனே டெல்லிக்கு வரும்படி தலைமை செயலாளராக இருந்த அஸ்வினி குமாருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றம்
அருணாசலபிரதேசத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் வர்மா தற்போது இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார். அஸ்வினி குமார் 4 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில்தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். டெல்லி வரை போன தமிழிசையின் சில கோரிக்கைகள் இன்றும் ஏற்கப்படவில்லை. அதே சமயம் கடிதம் மட்டுமே எழுதிய நிலையில் ரங்கசாமியின் கோரிக்கைகள் உடனே ஏற்கப்பட்டு உள்ளன. புதுச்சேரி அரசியலில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.