புதுவை ஜிப்மர் மருத்துவமனை அலட்சியம்.. மருத்துவமனை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமன மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் ஒருவர் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (21). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கர்ப்பிணியான சுதா தனது பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுதாவுக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதால், உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தை பிறக்க இன்னும் லேட்டாகும்
இதையடுத்து சுதாவின் உறவினர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனயில் அனுமதித்துள்ளனர். ஜிப்மரில் உள்ள மருத்துவர்கள் சுதாவை பரிசோதித்து பார்த்துவிட்டு, பனிக்குடம் ஏதும் உடையவில்லை. மேலும் குழந்தை பிறக்க சில நாட்கள் ஆகும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நோயாளிகள் உறவினர்கள் தங்குமிடம்
இதனிடையே சுதாவுக்கு தொடர்ந்து பிரசவ வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வலியால் அவதிப்பட்டு வந்த அவர் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் ஷெட்டில் தங்கியுள்ளார்.

குழந்தையை மீட்ட உறவினர்கள்
இந்நிலையில் சுதா இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அங்குள்ள கழிப்பிடத்துக்கு சென்றபோது, அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய உறுப்பினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சுதாவையும், குழந்தையையும் மீட்டு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை அலட்சியம்
இதனையடுத்து மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சுதாவின் உறவினர்கள் கூறுகையில் ஜிப்மர் மருத்துவர்கள் சரியான முறையில் மருத்துவம் பார்க்காமல் அலட்சியம் காட்டியதால்தான் சுதா கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

நடவடிக்கை
சரிவர மருத்துவம் பார்க்காத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சுதாவின் உறவினர்கள் தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள்
இந்தியாவில் உள்ள தலைசிறந்த அரசு மருத்துவமனைகளில் ஜிப்மர் மருத்துவமனயும் ஒன்று என பெயர் பெற்றிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், மருத்துவர்கள் தங்களுடைய பணியை சரிவர செய்யாததாலும், மருத்துவமனயின் தரம் தற்போது மோசமாகிவிட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சராமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ஆபத்து கால சிகிச்சை
அதுமட்டுமல்லாமல் ஜிப்மர் மருத்துவமனயில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பது கிடையாது என்றும், மாறாக பயிற்சி மாணவர்களே பணியில் இருப்பதால், விடுமுறை நாட்களில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆபத்து கால சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.

கோரிக்கை
இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் பலமுறை அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் எழுகிறது. இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஜிப்மர் மருத்துவமனயின் தரத்தை உறுதி செய்ய வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications