விடுதலை புலிகளுக்கு பயிற்சியா? எச்.ராஜா பேச்சில் 90% பொய்.. நடவடிக்கை எடுப்போம் - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு யாரும் ஆதரவாக செயல்படவில்லை என்றும் பாஜக தலைவர் எச்.ராஜா 90% பொய்தான் பேசுவார் எனவும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டு முதல் கட்டமாக 558 மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைச்சர் ரகுபதி பேட்டி
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 558 பேருக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த கட்டமாக மீதம் உள்ள பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்." என்று உறுதியளித்தார்.

எச்.ராஜா குற்றச்சாட்டு
அவரிடம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எச்.ராஜா பொய் சொல்வார்
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி "தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக யாரும் செயல்படவில்லை. பாஜக தலைவர் எச்.ராஜா உண்மையை பேச மாட்டார். அவர் பேசுவதில் 90 சதவீதம் பொய்தான். இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்படும்.

எச்.ராஜா மீது நடவடிக்கை
எச்.ராஜா குற்றச்சாட்டின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் கூறியது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால் எச்.ராஜா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications