ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த டிடிவி தினகரன்.. "அலறியடித்து" ஓடிய அமமுக தொண்டர்கள்.. காரணத்தை பாருங்க
புதுக்கோட்டை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு பெரும் களேபரமே அரங்கேறியுள்ளது.
இத்தனைக்கும் காரணம்.. 4 காளை மாடுகள். தினகரன் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும் அளவுக்கு அங்கு நிலைமை போய்விட்டது.
தமிழக தேர்தல் பிரச்சார களத்தில் பல விந்தைகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.

கார் பக்கத்தில் வெடி
உதாரணத்திற்கு, கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு, தனது காருக்கு பக்கத்தில், 5 ஆயிரம் வாலா சரவெடியை வைத்து அமமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், எனது வாகனத்தை மறித்து கொண்டு 5000 வாலா சர வெடி வடித்தார்கள். எனது, வண்டிக்கு பக்கத்திலேயே வெடிக்கப்பட்டது.

வண்டியில் தீ
எனது வண்டி நகர்ந்த பிறகு அவர்கள் பட்டாசு வெடித்து இருக்கலாம். வண்டி தீப்பிடித்து இருந்தால் எனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் நான் இதற்கு பயப்பட மாட்டேன். தேர்தல் கடமையையாற்றுவேன் என்று கடம்பூர் ராஜு குற்றஞ்சாட்டியிருந்தார். கோவில்பட்டி தொகுதியில்தான், தினகரன் அமமுக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காளை மாடுகள்
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுச்செயலாளர் தினகரன் பரப்புரை மேற்கொண்டிருந்த போது கூட்டத்தில் காளை மாடுகள் புகுந்ததால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர் ஆவேசமாக அதிமுகவை அட்டாக் செய்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென காளைகள் புகுந்துவிட்டன.

4 பேர் காயம்
காளைகள் புகுந்து மக்கள் அங்குமிங்கும் ஓடிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிக்கி 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற மலையாள திரைப்படம் ஜல்லிக்கட்டு பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு எருமை மாடு மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தபோது என்னவெல்லாம் களேபரம் ஏற்படும் என்பது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பெரும் பரபரப்பு
ஆனால்.. தினகரன் கூட்டத்தில் புகுந்தது 4 காளை மாடுகள். அதுவும் பெரிய பெரிய கொம்புகளுடன் அவை அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்ததால், அதன் காலடியில் சித்தியும், கொம்புகளில் சிக்கியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தொண்டர்கள் பரிதவித்துப் போய்விட்டார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications