வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற 3 பேரையும் ஆஜர்படுத்த புதுக்கோட்டை நீதிமன்றம் ஆணை!
புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றப் பத்திரிக்கையை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மூன்று பேரையும் மார்ச் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில், அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப் பத்திரிக்கையில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த காவலர்கள் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் பட்டியலின சமூக மக்கள் என்பதால் அவர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே சிபிசிஐடி போலீசாரின் குற்றப் பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததை சுட்டிக்காட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.
மேலும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள 3 பேரையும் மார்ச் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications