மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே குருவாண்டான்தெரு என்ற பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கடந்த 2022 டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்த பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
தண்ணீர் தொட்டி: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான்தெரு என்ற பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்ய 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அங்கு இருக்கிறது.
அதில் இருக்கும் நீரைத் தான் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் நீரைப் பயன்படுத்திய பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திடீரென வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மாட்டு சானம்: இப்படி அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தண்ணீர் தொட்டியில் எதாவது பிரச்சினை இருக்குமோ எனக் கருதிய அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது அதில் மாட்டுச் சாணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்துள்ளன.
கோரிக்கை: பொதுமக்கள் குடிக்கும் நீரில் மாட்டுச் சாணம் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் முறையிட்ட கிராம மக்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைத் சுத்தப்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுவதால் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அதில் மாட்டுச் சாணம் கலந்து இருக்கிறதா என்பதை உறுதி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டு இருப்பது உறுதியானால் இந்த மோசமான சம்பவத்தைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். மேலும், அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது.
நடவடிக்கை பாயும்: இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து பட்டியலின மக்கள் மட்டுமின்றி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications