''அம்மா வழியை பின்பற்றியதால் செந்தில்பாலாஜிக்கு வந்த விளைவு''! போட்டுத்தாக்கிய ஆர்.எஸ்.பாரதி!
புதுக்கோட்டை: ஜெயலலிதா வழியை பின்பற்றியதால் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
டான்சி நிலத்தை வாங்கிவிட்டு அதை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்ததை போல் செந்தில்பாலாஜியும் தாம் வாங்கியதை திருப்பிக் கொடுத்திருக்கிறார் எனக் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவர் வீட்டுக்கு முதல் ஆளாக சென்றவர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கேட் வாசலிலேயே நாற்காலியை போட்டு அமர்ந்து செந்தில்பாலாஜிக்காக பேட்டிகள் கொடுத்தவர் ஆர்.எஸ்.பாரதி.
அப்படிப்பட்ட ஆர்.எஸ்.பாரதியே செந்தில்பாலாஜியை போட்டுத்தாக்கும் வகையில் வஞ்சப்புகழ்ச்சி அணியில் அவரை பற்றி விமர்சித்துள்ளார். இன்றைக்கு எப்படி வாங்கியதை திருப்பிக் கொடுத்துவிட்டதாக செந்தில்பாலாஜி கூறுகிறாரோ அதே போல் தான் அன்றைக்கு டான்சி நிலத்தை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்தார் ஜெயலலிதா என்றார்.
செந்தில்பாலாஜிக்கு அன்றைக்கே வழிகாட்டியவர் ஜெயலலிதா என்றும் அம்மாவின் வழியை அயராது செந்தில்பாலாஜி பின்பற்றியதால் வந்த விளைவு தான் இந்த நெருக்கடி எனவும் மிகவும் ஓபனாக பேசினார். இதனிடையே இப்போது (ஸ்டாலின்)ஐயாவின் வழியை பின்பற்றுகிறாரே செந்தில்பாலாஜி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நீங்க போய் திருந்தி ஒழுங்காக வாழ வேண்டும் என வழிகாட்டுவது தான் ஐயா வழி என ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார்.
இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆரம்பத்தில் காட்டப்பட்ட ஈடுபாடு இப்போது அவரிடம் குறைந்துவிட்டதை போலவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications