விஐபியாக இருந்தாலும் விட மாட்டோம்.. கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை.. அமைச்சர் ரகுபதி உறுதி
புதுக்கோட்டை: கோடநாடு வழக்கில் யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். உண்மை குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும் போது, கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் நிலைப்பாடு மேகதாது அணை அமைக்கக்கூடாது என்பதே ஆகும் என்றும் கூறினார்.
கோடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்கிறபோது, கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார். யாரையும் அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கோடநாடு வழக்கை ஆயுதமாக பயன்படுத்தவில்லை.
அம்பேத்கர் படம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தலைமை நீதிபதியை சந்தித்து கலந்து ஆலோசித்தேன். அம்பேத்கர் படம் உள்ளிட்ட எந்த புகைப்படங்களையும் நீதிமன்றங்களில் இருந்து அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு எடுத்து சொல்லி விடுங்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது வாடிக்கையானது.விலைவாசி உயராத அளவு தமிழக அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஒரு சிலர் காய்கறிகளை பதுக்குவதாக தகவல் கிடைக்கிறது. அது சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications