புதுக்கோட்டையில் குரங்கு அம்மை? சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு அறிகுறிகள்.. அதிர்ச்சி!
புதுக்கோட்டை : சிங்கப்பூரில் இருந்து வந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி காணப்பட்டதையொட்டி அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்காணிக்க விமான நிலையங்களில் சுகாதார துறையினர் நடவடிக்களை முடுக்கி விட்டுள்ளனர்.

குரங்கு அம்மை பாதிப்பு
அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. குரங்கு அம்மை பரவிவரும் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி
இந்நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் ஆசாரிப்பளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2 நாட்கள் ஆகும்
பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் அவர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வர இரண்டு நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் குரங்கு அம்மை?
இந்நிலையில் புதுக்கோட்டையில், சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி காணப்பட்டுள்ளது. அறிகுறி உடைய நபர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ சோதனைக்காக நாளை பூனேவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications