இந்தியாவிலேயே தலித்களுக்கு அதிக 'அட்டூழியங்கள்' நடக்கும் மாநிலம் தமிழ்நாடு.. அண்ணாமலை பரபர பேச்சு!
புதுக்கோட்டை: இந்தியாவிலேயே, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு 'அட்டூழியங்கள்' அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த நடைபயணத்தின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனப் பேசினார்.

அண்ணாமலை பேசுகையில், "தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா போன்ற வெளிநாடுகளில் பணிபுரிந்து அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஒருபுறம் இது பெருமையாகவும் மறுபுறம் கவலையாகவும் இருக்கிறது. 70 ஆண்டுகளாக ஒரு சில பகுதிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளை இங்கிருந்த ஆட்சியாளர்கள் உதாசீனப்படுத்தியதன் வெளிப்பாடே இது.
திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை ஆபத்சகாயேஸ்வரர் தான் காப்பாற்றவேண்டும். கந்தர்வகோட்டை உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரம் ஏக்கருக்கு முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்தது. காவிரி வைகை குண்டாறு இணைப்பு என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
இந்தியாவையே உலுக்கிய வேங்கைவயல் குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இந்த தொகுதியில் தான் நடைபெற்றது. 300 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னுமும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 'கொடுமைக்கு ஆளாகக்கூடியவை' என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு 'அட்டூழியங்கள்' அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சமூகநீதி என்று வாய் கிழிய பேசிவிட்டு சமூக அநீதி புரிந்தவர்களுக்கு துணை செல்வது தான் திராவிடமாடல். புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நிலக்கரி எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்க, தமிழக பாஜக மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி அவர்களிடம் கோரிக்கை வைத்து இரண்டே நாட்களில் டெல்டா பகுதியில் விடப்பட்ட நிலக்கரி டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு பக்கபலமாக பாஜக என்றும் துணை நிற்கும் என்பதற்கு இந்த நிலக்கரி டெண்டர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆனால் கடந்த திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, மூன்று வருடத்திற்குப் பிறகு நாடகம் ஆடினர். கந்தர்வகோட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்ல புதிய இருப்புப்பாதை வழி, தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு காவிரி நதியில் இருந்து துணை வாய்க்கால் வெட்டி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 30 கிராம மக்களின் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி, தாலுகா மருத்துவமனையை தரம் உயர்த்துதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒன்றையும் திமுக நிறைவேற்றவில்லை. இவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு பாஜக மக்களுடன் இணைந்து போராடும்.
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று புதுக்கோட்டை. இதை சரி செய்து, வேலைவாய்ப்புகள் வழங்க இந்த மாவட்டத்தின் இரண்டு திமுக அமைச்சர்கள் ஒன்றுமே செய்யவில்லை. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். பாஜக இந்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை மொத்தமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications