செந்தில் பாலாஜி இன்னமும் அமைச்சரா இருக்கார்னா காரணம் இதுதான்.. பின்ன சும்மாவா? பிரேமலதா பாய்ச்சல்!
புதுக்கோட்டை: செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவருக்கு 4 முறை ஜாமீன் மறுக்கப்பட்டும் இன்னமும் அமைச்சராக தொடர்கிறார் என்றால் காரணம் இதுதான் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துப் பேசியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் தேர்தலுக்கு முன்பாக ஒரு நிலைப்பாட்டையும் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறியும் உள்ளது. பல்லாயிரக் கணக்கான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது. மகளிர் உரிமைத்தொகை விவகாரம் திமுகவிற்கு மக்களவை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்.

தற்போது தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது. தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளது என்பதை குறித்து விரைவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் இதுவரை தெளிவு இல்லை." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரேமலதா, "ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்ட போதிலும் இன்னமும் அவர் அமைச்சராக தொடர்கிறார் என்றால் திமுக தலைவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்கும் செந்தில் பாலாஜி எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.
போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படிப்படியாகத்தான் டாஸ்மாக் கடைகளை மூட முடியும் என்பது உண்மைதான். இருந்தாலும் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகம் செல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் டாஸ்மாக்கில் விற்பனை இலக்கு விரைவில் நிர்ணயம் செய்யப்படும். அது 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். இளைஞர்கள் பெண்கள் உட்பட அனைவருமே தற்போது மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளது வேதனை அளிக்கக் கூடியது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications