தவெக கொடி கட்டிய கார்! போதையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள்! தர்ம அடி கொடுத்த புதுக்கோட்டை மக்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தமிழக வெற்றிக் கழக கொடிக் கட்டிய கார் ஒன்று தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விஜய் மக்கள் இயக்கத்தில் ஒன்றிய செயலாளராக இருந்தவர் உள்பட 3 பேர் மது போதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் அங்குள்ள பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரத்தான் போட்டி நடந்தது. தனியார் நிறுவனம் சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போதைப் பொருள் விழிப்புணர்வுக்காக இந்த மாரத்தான் போட்டி நடந்தது. மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டனர். சிறுவர் சிறுமிகள் மலைக்கோட்டை வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி கட்டியபடி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.

திடீரென அந்த கார் சாலையில் எதிரே நின்றுகொண்டிருந்த தண்ணீர் வண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் அந்த காரின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் காரை ஓட்டியவர்களும் லேசான காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அங்கு ஓடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தை பார்த்ததும் அங்குள்ள மக்கள் ஓடோடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.
அப்போது அந்த காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காரில் இருந்த 3 பேரை வெளியே இழுத்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர் 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரும் இது தொடர்பாக அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் விஜய் மக்கள் இயக்கத்தில் ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆவார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பலக்கோட்டை விஜய் மக்கள் இயக்க முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்த மணி என்பது தெரியவந்துள்ளது. மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications