முழு ஆட்டை கிழித்து.. கடல் உணவுகளை உள்ளே வைத்து.. தைத்த வில்லேஜ் குக்கிங் சானல் குழு.. வீடியோ வைரல்
புதுக்கோட்டை: முழு ஆட்டை கிழித்து அதனுள் கடல் உணவுகளான நண்டு, இறால், கணவாய் மீன் ஆகியவற்றில் மசாலாக்களை தடவி பொதித்து செம வாசனையுடன் வில்லேஜ் குக்கிங் குழுவினர் செய்த சமையல் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் நடத்தி வரும் சமையல் சேனல் வில்லேஜ் குக்கிங் (village cooking channel)சேனல் ஆகும். இந்த குழுவில் 6 பேரில் ஒருவரான சுப்பிரமணிக்கு இணைய பயன்பாடு, கேமரா, எடிட்டிங் எல்லாம் அத்துப்படியாம். இதனால் விவசாய பின்னணியை கொண்ட இவர்கள் விவசாயம் இல்லாத நேரங்களில் பொழுதுபோக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்த சேனல் இன்று தென்னிந்தியாவின் நம்பர் ஒன் சேனலாக உள்ளது.
ஏற்கெனவே பிரபலமடைந்த இந்த சேனல் ராகுல் காந்தியால் மேலும் பிரபலமடைந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பிரியாணிக்கு ரெய்தா
அப்போது வில்லேஜ் குக்கிங் எனப்படும் யூடியூப் சேனலின் குழுவினரை கரூர் எம்பி ஜோதிமணி மூலம் ராகுல் காந்தி சந்தித்து, அவர்களது சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த குழுவினர் சமைத்து கொடுத்த காளான் பிரியாணிக்கு ரெய்தா செய்யும் போது இந்தி கலந்த தமிழில் ராகுல் காந்தி பேசியது அருமையோ அருமை.

தயிர்
வெங்காயம், தயிர், கல் உப்பு என சமையல் குழுவின் பெரியவர் சொல்ல சொல்ல ராகுல் காந்தியும் அதை பின்தொடர்ந்து கூறிய விதம் வைரலானது. பின்னர் அவர்களுடன் கோரை பாயில் அமர்ந்து மிகவும் எளிமையாக ராகுல் காந்தி உணவு உட்கொண்டது நெகிழ்ச்சியான தருணமாகும். இந்த குக்கிங் வீடியோவும், ராகுல் காந்தியுடனான உரையாடலும் மிகவும் பிரபலமானது.

2 கோடி வியூஸ்
இந்த நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது. இதை அங்கீகரிக்க டைமன்ட் பட்டனை யூடியூப் நிறுவனம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அது ஒரே நாளில் 2 கோடி வியூஸ்களை நெருங்கி வருகிறது.

ரசிகர்கள் பட்டாளம்
அப்படி என்ன சமைத்தார்கள் என கேட்கிறீர்கள். இவர்கள் சமைக்கும் விதம், பேசும் வெள்ளந்தியான பேச்சு, பெரியவர் பயன்படுத்தும் உணவு பொருட்களின் பெயர், இளைஞர்கள் செய்யும் கலாட்டா என ஒவ்வொன்றுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். அவ்வாறிருக்கையில் அவர்கள் முழு ஆட்டை தோல் உரித்து அதன் தலையை வெட்டி, அதனுள் இருந்த உடல் பாகங்களை எடுத்தனர். பின்னர் நண்டு, இறால், கணவாய் மீன் ஆகியவற்றுக்கு மசாலா தடவினர்.

ஆட்டுக்குள் பொதித்தனர்
மசாலா தடவிய கடல் உணவுகளை ஆட்டுக்குள் அப்படியே பொதித்தனர். பின்னர் அந்த உடலை ஊசி நூல் கொண்டு தைத்து ஒரு அண்டாவில் தண்ணீர் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட மசாலாக்களை போட்டு ஒரு ஸ்டான்டில் இந்த ஆட்டை வைத்து வேக வைத்தனர். பின்னர் நூலை கட் செய்து அதனுள்ளே இருந்த கடல் உணவுகளை அப்படியே கொட்டி ஆட்டையும் கடல் உணவைும் உண்டு மகிழ்ந்தனர். பின்னர் ஏழை எளிய மக்களுக்கும் பரிமாறினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications