புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 4 பேர் பலி.. 20 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே இந்திராயணி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அங்குக் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வந்த நிலையில், திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில் நான்கு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் சூழலில், மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், பரவலாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதேநேரம் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும் சூழலில், மக்களுக்கு அது சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

மகாராஷ்டிரா மழை
இதற்கிடையே கனமழையால் மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே இந்திராயணி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. குந்த்மாலா பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குந்த்மாலா என்பது பிரபலமான சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக மழைக் காலங்களில் இங்கு அதிகளவிலான மக்கள் வருகை தருவது வழக்கம்.
இடிந்து விழுந்தது
பாலம் இடிந்து விழுந்தபோது, சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் மீது இருந்ததாகவும், அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், எத்தனை சுற்றுலாப் பயணிகள் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியைத் தொடங்கினர். இதுவரை எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் பாலத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.. அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே புனே மற்றும் பிம்பிரி சின்ச்வாட் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புனேவில் மாவல் பகுதியில் இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அச்சம்
சுமார் 4-5 வருடங்களுக்கு முன்பு தான் இந்த பாலம் புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும் அப்போதே இந்த பாலத்தின் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். ஆனால் பல சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதுவரை நான்கு பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிரதமர் மோடி
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தோருக்கு அங்குள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருவதாக மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்குச் சிகிச்சை செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்றும் ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது சைப்ரஸில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் உடன் விபத்து குறித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications