சாவர்க்கர் மீதான விமர்சனம்.. ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்.. பதறிய புனே நீதிமன்றம்
புனே: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான ராகுல் காந்தி, சாவர்க்கர் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய கருத்து தொடர்பான வழக்கு இப்போதும் ஓயவில்லை. இதுதொடர்பாக சாவர்க்கர் பேரன், ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சாவர்க்கர் மீதான கருத்துக்காக தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாக புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்தி பரபரப்பு தகவல்களை சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழந்து சுமார் 11 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. காங்கிரஸ் வசம் இருந்த சில மாநிலங்களிலும் அந்தக் கட்சி நெருக்கடியை சந்தித்து வருகிறது. மறுபக்கம் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வரும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

சாவர்க்கர் மீது விமர்சனம்
அந்த வகையில் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, வலதுசாரியும், இந்துத்துவா தலைவர்களில் ஒருவருமான சாவர்க்கர் குறித்து பேசியிருந்தார். "தன்னை விடுதலை செய்வதற்காக சாவர்க்கர் ஆங்கிலேயேர்களிடம் கைக்கூப்பினார். தொடர்ந்து ஆங்கிலேயேர்களின் சொல்படி நடந்து கொள்வதாக அவர் உறுதியும் அளித்திருந்தார்." என கூறியிருந்தார்.
இது பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சாவர்க்கரின் பேரன் சத்யாக்கி சாவர்க்கர் புனே நீதிமன்றத்திலும், தேவேந்திர பூட்டா என்பவர் நாசிக் நீதிமன்றத்திலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் லக்னோ நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு நடந்தது.
அவதூறு வழக்கு.. கொலை மிரட்டல்
இதில் பூட்டா தொடர்ந்த வழக்கில், ராகுலுக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம், "விடுதலைக்காக போராடியவர்களை இப்படி பேசலாமா." என்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் சாவர்க்கர் பேரன் தொடர்ந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ராகுல் காந்தி சார்பில் பவார் என்கிற வழக்கறிஞர் ஆஜராகியிருந்தார். சாவர்க்கரின் ஆதரவாளர்கள் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பதால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் சாவர்க்கரின் பேரன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய சொல்லி, விரைவில் மற்றொரு வழக்கு தாக்கல் தொடரவுள்ளதாகவும் பவார் தெரிவித்துள்ளார்.
கோட்சே.. குற்ற பின்னணி
ராகுல் காந்தியிடம் கலந்தாலோசிக்காமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் ராகுலின் பாதுகாப்பு குறித்து அச்சம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவதூறு வழக்கு தொடர்ந்து சாவர்க்கர் பேரன் இதன் மூலம் அரசியல் ரீதியாக சில ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளதாகவும் பவார் தெரிவித்துள்ளார்.
பவார் மேலும், "வழக்கு தொடர்ந்துள்ள நபரின் தாத்தாவினுடைய ஆதரவாளர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இதனால் வழக்கில் ஆதிக்கம் செலுத்துவது அல்லது அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது தேசதந்தை மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள நாதுராம் கோட்சே, கோபால் கோட்சேவுடன் மனுதாரருக்கு நேரடி தொடர்புள்ளது.
குற்ற பின்னணியுடன் தொடர்புடைய வரலாறு இருப்பதால், அதுபோன்ற சூழ்நிலை மீண்டு வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications