அதிமுக எம்.பி ஆர்.தர்மர் சகோதரி மகனை வெட்டிய மர்ம கும்பல்.. முதுகுளத்தூரில் பயங்கரம். என்ன நடந்தது?
ராமநாதபுரம் : அதிமுக ராஜ்யசபா எம்.பியும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ஆர்.தர்மரின் மருமகன் கோகுலகண்ணன், காரில் வந்த மர்ம கும்பலால் வாளால் வெட்டப்பட்ட சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்.பி ஆர்.தர்மர் கட்டி வரும் வீட்டுக்கு அருகே அதிவேகமாக கார் ஒன்று வந்ததால், காரை மறித்து விசாரிக்கச் சென்ற ஆர்.தர்மரின் சகோதரி மகன் கோகுல கண்ணன் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளார்.
கையில் வெட்டப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கோகுல கண்ணன். எம்.பியின் மருமகன் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி கொடுத்த ஓபிஎஸ்..பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியை விட்டே நீக்கிய இபிஎஸ்
அதிமுக எம்.பி தர்மர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கோகுலகண்ணன். இவர், அதிமுக ராஜ்யசபா எம்.பியும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ஆர்.தர்மரின் சகோதரி மகன் ஆவார். அதிமுக எம்.பி ஆர்.தர்மர் சொந்த ஊரான புளியங்குடியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் அருகே ஒரு கார் அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த எம்.பி தர்மர் அவர்கள் யார் என கோகுலகண்ணனிடம் விசாரிக்குமாறு கூறியுள்ளார்.
எம்.பியின் சகோதரி மகன்
கோகுலகண்ணன் அந்த காரை மறித்து விசாரித்த போது, காரில் வந்த கும்பல் கோகுலகண்ணனை பேச விடாமல் வாளால் வெட்டியுள்ளனர். அப்போது கையால் அவர் தடுத்துள்ளார். இதனால், அவரது கையில் வெட்டு விழுந்துள்ளது. உடனே அங்கு ஆட்கள் வரவும் காரில் அவர்கள் தப்பியுள்ளனர். காயமடைந்த கோகுல கண்ணனை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மர்ம கும்பல்
இச்சம்பவம் குறித்து கோகுலகண்ணனின் அண்ணன் ராமமூர்த்தி என்பவர் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ராஜ்யசபா எம்.பி ஆர்.தர்மரின் சகோதரி மகனை வாளால் வெட்டிய அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான எம்.பி ஆர்.தர்மரின் சகோதரி மகனை மர்ம கும்பல் வெட்டிச் சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தைக் கிளப்பியுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுக உட்கட்சி குழப்பத்தில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இருபிரிவாகச் செயல்பட்டு வருகின்றனர். தனது ஆதரவாளருக்கு ஓபிஎஸ் சீட் கேட்டதே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியதாக கூறப்பட்டது. அப்படியாக ஓபிஎஸ் தரப்பில் சீட் பெற்ற ஆர்.தர்மர், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் முற்றிய நிலையில், தர்மரை தங்கள் பக்கம் இழுக்க ஈபிஎஸ் தரப்பினர் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
உறுதியாகச் சொன்ன தர்மர்
அதன் காரணமாகவே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரையும் கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி, ஆர்.தர்மரை இன்னும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஆனால், அணி தாவ மாட்டேன் என உறுதியாக இருக்கிறார் தர்மர். ஒன்றிய சேர்மனாக இருந்த தன்னை டெல்லி வரை செல்லும் வாய்ப்பினை தந்த ஓபிஎஸ்ஸை விட்டு வரமாட்டேன் என அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் எம்.பி வீட்டுக்கே அருகே காரில் வந்த மர்ம நபர்களால் எம்.பியின் சகோதரி மகன் வெட்டப்பட்டுள்ளார்.