2024ல் முற்றுப்புள்ளி.. இந்தியாவை சின்னாபின்னமாக்கிய பாஜக.. ராமநாதபுரத்தில் இறங்கியடித்த ஸ்டாலின்
ராமநாதபுரம்: கடந்த 9 ஆண்டு ஆட்சியில் இந்தியாவை பாஜக சின்னாப்பின்னமாக்கிவிட்டது. இதற்கு 2024ல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற பணிகளை தொடங்கி உள்ளார்.

அதன்படிதமிழ்நாடு முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்கு சாவடிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக வாக்குச்சாவடி முகவர்களின் பயிறசி பட்டறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பாசறை கூட்டம் நடத்திட முடிவு செய்து 5 மண்டலங்களாக பிரித்து உத்தரவிட்டார்.
அதன்படி முதல் கூட்டம் டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் நிர்வாக ரீதியான 17 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து 2வது பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் 40ம் நமதே என்ற லட்சத்தியத்துடன் தொண்டர்கள் கம்பீரத்துடன் பணியாற்ற வேண்டும்.
தினமும் ஒருமணிநேரம் பூத் பணிகளுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் ஒதுக்கிட வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள குடும்பங்களில் ஒருவராக முகவர்கள் மாற வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு மக்களிடம் எடுத்து கூற வேண்டும். வீடுகளுக்கு செல்லும்போது சிலர் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பு இருக்காது. இருப்பினும் நாம் விடக்கூடாது. என்னை பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் அனைவருக்குமான ஆட்சியை நடத்தி வருகிறோம். அனைத்து குடும்பங்களும் ஏதேனும் திட்டத்தில் பயனளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விடியல் பயணம் திட்டத்தில் இலவச பயண திட்டத்தில் கோடிக்கான பெண்கள் பயணம் செய்கின்றனர். வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 13 லட்சம் குடும்பங்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நான்முதல்வன் திட்டத்தில் லட்சக்கணக்கானவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவதூறு செய்திகளை பரப்ப சிறுநரிக்கூட்டம் சுற்றி வருகிறது. பொய்களுக்கு ஆயுள் ரொம்ப குறைவு. அவர்கள் பொய்யை கூறட்டும். நாம் நமது திட்டங்களை கூறுவோம். இதில் எதிரிகளின் அவதூறு என்பது சுக்கு நூறாக நொறுங்கிடும். இப்போது சமூக ஊடகங்கள் சிறப்பான பரப்புரை களமாக மாறிவிட்டது. சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதிமுக, பாஜகவினர் எதையும் செய்யாமல் அனைத்தையும் செய்ததாக விளம்பரம் செய்வார்கள். நாம் நமது சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும். டீக்கடையில் பேசிய அரசியல் வலைதளங்களில் பேசப்படுகிறது. இதனால் நடமாடும் ஊடகமாக நாம் மாற வேண்டும். இதை செய்தால் எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாஜகவால் இந்தியாவின் கட்டமைப்பு சின்னாப்பின்னமாகி விட்டது. இதற்கு 2024ல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.












Click it and Unblock the Notifications