சொத்து வாங்க முடியல! தொட்டதற்கெல்லாம் லஞ்சம்! கட்டு கட்டாக ஊழல் பணத்துடன் சிக்கிய சார் பதிவாளர்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் சார் பதிவாளர் பெத்துலட்சுமியிடமிருந்து கட்டுக்கட்டாக லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசூல் வேட்டை: ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக இருப்பவர் பெத்துலட்சுமி. பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் பதிவுக்கட்டணம் நீங்கலாக, அவர்களின் சொத்து மதிப்புக்கேற்ப கூடுதல் தொகையை ஆவண எழுத்தர்கள் சிலர் மூலமும், இடைத்தரகர்கள் மூலமும் வசூல் செய்து வந்திருக்கிறார். இதனால் கடுப்பான பாதிக்கப்பட்டோர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர்.

பேருந்தில் ஏறி தப்பிக்க முயற்சி: அதன் பேரில் நேற்று மாலை முதல் பொறுப்பு சார் பதிவாளர் பெத்துலட்சுமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர். ஐப்பசி மாதத்தின் முதல் 2 நாட்களும் பத்திரப்பதிவு வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றது. இதனால் அதற்கான வசூல் தொகையை ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே வைத்து வாங்கிக் கொண்ட சார் பதிவாளர் பெத்துலட்சுமி, தன்னை சிலர் நோட்டமிடுவதை அறிந்ததும் புத்திசாலித்தனமாக பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றிருக்கிறார்.
சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை: ஆபால் அதற்குள் சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1,84,000 இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், சார் பதிவாளரை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்று சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இரவு நேரம் என்பதாலும் பெண் அதிகாரி என்பதாலும் லஞ்சப் பணத்தை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு அவரை அவரது வீட்டுக்குச் செல்ல அனுமதித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்று காலை 6.30 மணிக்கெல்லாம் பெத்துலட்சுமி இல்லத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
வாழ்நாள் முழுவதும் வழக்கு விசாரணை: அதுமட்டுமல்ல லஞ்சப்பணம் பற்றி கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதனல் எந்நேரமும் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அரசாங்கத்திடமிருந்து மாதம் 1ஆம் தேதி வந்துவிட்டால் ஊதியம், சமுதாயத்தில் சார் பதிவாளர் என்ற உயர்ந்த அந்தஸ்து, என எத்தனையோ சலுகைகள் உள்ள போதும் ஊரார் பணத்திற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் வழக்கு, விசாரணை என வாழ்நாள் முழுவதும் அலைய வேண்டும்.












Click it and Unblock the Notifications