எப்படி எல்லாம் ஆட்டைய போடுறாங்க.. ஆன்லைன் ஆர்டருக்கு வந்த பரிசுக்கூப்பன்.. நம்பி லட்சத்தை இழந்த நபர்
ராமநாதபுரம்: ஆன்லைனில் ஆர்டர் செய்ததற்கு ரூ.9.20 லட்சம் பரிசுக்கூப்பன் விழுந்திருப்பதாக கூறி ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக புதுப் புது வழிகளில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை அப்டேட் செய்து கொடுப்பதாக கூறி ஒடிபி எண்ணை கேட்டு அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடுவது போன்ற மோசடி செயல்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
அதேபோல ஏடிஎம் காலாவதி ஆகிவிட்டதாக கூறி அதில் உள்ள எண்களை கேட்டு வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாக சுருட்டுவது என புது புது வழிமுறைகளை கையாண்டு பணத்தை திருடும் கும்பல் இயங்கி கொண்டு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
ஆன்லைன் மோசடி
வங்கிக் கணக்கு விவரம் ஒடிபி எண்கள் போன்ற விவரங்களை யாருக்கும் பகிரக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் தங்கள் அறியாமையாலும் ஆசை வார்த்தைகளை நம்பியும் பணத்தை இழந்து விடுகின்றனர். இது போல் ஒரு சம்பவம் தான் ராமநாதபுரம் அருகே நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அய்யா கண்ணு பிள்ளை பகுதியை சேர்ந்த சவுந்திர பாண்டி என்பவர் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் வீட்டு உபயோக பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
கிப்ட் கூப்பன் அனுப்பியிருக்கிறோம்
சில நாட்களுக்கு பிறகு இவரது வீட்டின் முகவரிக்கு கூரியர் ஒன்று வந்துள்ளது. இந்தக் கூரியரில் நீங்கள் ஆர்டர் செய்த நிறுவனத்தின் பெயரில் பரிசுக்கூப்பன் இருந்துள்ளது. நிறுவனத்தின் 14 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உங்களுக்கு கிப்ட் கூப்பன் அனுப்பியிருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தனர். அந்த கூப்பனை சுரண்டினால் அதில் ஒரு எண் இருக்கும். அந்த எண்ணை கூப்பனில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு தெரிவித்தால் வங்கிக் கணக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
8 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக
கூப்பனில் கூறியிருந்த படியே அதை சுரண்டி பார்த்துள்ளார். அப்போது உங்களுக்கு ரூ. 8 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்த சவுந்திர பாண்டி.. எட்டு லட்சமா ஆச்சே... என்ற ஆசையில் அந்தக் கூப்பனில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய நபர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசியிருக்கிறார்.
குறிப்பிட்ட தொகையை அனுப்பனும்
அந்த நபரிடம் தனக்கு 8 லட்ச ரூபாய் பரிசு அடித்து இருப்பதாக சவுந்திர பாண்டி கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த நபர்... அப்படியா, உங்களுக்கு வாழ்த்துக்கள்.. ஆர்டர் செய்த பொருட்களின் அடிப்படையில் உங்களுக்கு குலுக்கல் முறையில் மேலும் ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதனால் உங்களுக்கு மொத்தம் 9.20 லட்சம் பரிசாக கிடைக்கப் போகிறது என்று ஆசை வலையை விரித்துள்ளார். ஆனால், பணத்தை பெறுவதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
சொன்னபடி பரிசுத்தொகை வரவில்லை
இதை அப்படியே நம்பிய சவுந்திர பாண்டி... 9 லட்ச ரூபாய் கிடைக்க போகிறது என்ற ஆசையில் சிறிது சிறிதாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். பணத்தை அனுப்பியும் பரிசுத்தொகை வராததால் சவுந்திர பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே கூப்பனில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை சவுந்திரபாண்டி உணர்ந்துள்ளார். உடனடியாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.