நிச்சயம் கலெக்டர் ஆவேன்.. காவிய ஜனனி உறுதி! 10ஆம் வகுப்பில் அசத்திய கூலித் தொழிலாளி பெற்றோரின் மகள்!
ராமநாதபுரம்: கமுதி அருகே கூலி தொழிலாளியின் மகளான மாணவி காவிய ஜனனி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். உயர்கல்வி முடித்து கலெக்டர் ஆவதே தனது லட்சியம் எனக் கூறியுள்ளார் சாதனை மாணவி காவிய ஜனனி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவிய ஜனனி 50க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆங்கில பாடத்தில் 100, கணித பாடத்தில் 100, அறிவியல் பாடத்தில் 100, சமூக அறிவியல் பாடத்தில் 100 மற்றும் தமிழில் 99 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்களை பெற்று கமுதி மாணவி காவிய ஜனனி சாதனை படைத்துள்ளார்.
கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - வசந்தி தம்பதியரின் மகள் காவிய ஜனனி. தர்மராஜ் திருப்பூரில் வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டராக பணியாற்றி வருகிறார். வசந்தி பேரையூரில் கடை ஒன்றில் வியாபாரியாக கூலி வேலை செய்து வருகிறார்.
தாயும் தந்தையும் கூலி வேலை செய்து மகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து தமது பெற்றோரையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார் காவியா ஜனனி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்ற மாணவி காவிய ஜனனி பேசுகையில், "சிறு வயது முதலே என்னை எனது பெற்றோர் மிகவும் ஊக்கமளித்து படிக்க வைத்தனர். குடும்பத்தின் சூழ்நிலை கருதி கடுமையாக படித்து வந்தேன். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் எடுப்பதற்கு பயிற்சி அளித்தனர்.
பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கலெக்டர் ஆவது எனது லட்சியம். அதற்கு ஏற்ற பாடப்பிரிவை 11 ஆம் 12ம் வகுப்பில் தேர்வு செய்து படித்து பிளஸ் 2விலும் அதிக மதிப்பெண் பெறுவேன். பின்னர் கல்லூரி படிப்பை முடித்து நிச்சயம் கலெக்டர் ஆவேன்" எனக் கூறி உள்ளார்.
பின் தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில், பெற்றோர் கூலி வேலை செய்து வரும் நிலையில் நன்றாகப் படித்து 499 மதிப்பெண்கள் எடுத்துள்ள காவியா ஜனனிக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications