காலம் பூரா கட்சிக்கு உழைச்சேன்! மாவட்டச் செயலாளர் திமுகவை அழிக்கிறார்! கண்ணீருடன் குமுறிய நிர்வாகி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ரவுடிகளை வைத்து தன் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக மாணவரணி நிர்வாகி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போஸ்டர் அரசியல்: ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். இவரை கமிஷன் முத்துராமலிங்கம் என்று விமர்சித்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் பசுபதி என்ற கருப்பசாமி பாண்டியன். இந்த போஸ்டரால் டென்ஷனான மாவட்டச் செயலாளர் தரப்பு, பசுபதியை அழைத்து எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது.

கட்சியை அழிப்பதாக குமுறல்: இதனிடையே இது குறித்து பிரஸ்மீட் வைத்த திமுக மாணவரணி நிர்வாகி பசுபதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கட்சியை அழித்துவிட்டதாகவும் தன் மீது ரவுடிகளை வைத்து காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் கண்ணீர்மல்க குமுறியுள்ளார். போஸ்டர் அடித்து ஒட்டியதற்காக தன்னை காரில் கடத்திச் சென்று மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதாக பயம் விலகாமல் அழுதபடியே பேட்டியளித்திருக்கிறார் பசுபதி.
ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை: மாவட்டச் செயலாளர் செய்யும் தவறுகளை பற்றி புகார் சொல்ல சென்னைக்கு சென்று ஸ்டாலினை சந்திக்க முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை எனவும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் கட்சி அழிந்துவிடும் எனவும் சாபம் விடுத்துள்ளார். தனது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் தான் காரணம் என மாணவரணி நிர்வாகி பசுபதி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்பு: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் செல்லவுள்ள நிலையில் அங்கு கிளமியிருக்கும் உட்கட்சி பஞ்சாயத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை வைத்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் திமுக மாவட்டச் செயலாளர் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications