''சும்மா போயா அங்கிட்டு''! நவாஸ் கனியிடம் வார்த்தையை விட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன்! மோதல் முழு பின்னணி
ராமநாதபுரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, ஆளுநருடன் மோதல் என ஏற்கனவே கடும் அப்செட்டில் இருந்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்த செயலால் மிகக் கடுமையாக கோபப்பட்டிருக்கிறார்.
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கூட்டணிக் கட்சியின் எம்.பி.யிடம் இப்படி தான் நடந்துகொள்வீர்களா எனவும் ராஜகண்ணப்பனுக்கு கடுமையாக டோஸ் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் பிற்பகல் 3 மணிக்கு அரசு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகல் 2.45 மணிக்கே நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அடுத்தடுத்து செல்வதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர் தான் மாவட்ட ஆட்சியரிடம் அவசரம் காட்டியிருக்கிறார்.
புதிதாக வந்த மாவட்ட ஆட்சியரோ, அமைச்சரே சொல்லிவிட்டார் பிறகென்ன என நினைத்து அரசு நிகழ்ச்சியை முன் கூட்டியே தொடங்கிவிட்டார். இந்நிலையில் 3 மணிக்கு நிகழ்ச்சி அரங்கத்திற்குள் எண்ட்ரி ஆன ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதெல்லாம் நியாயமே இல்லை என கொதித்திருக்கிறார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டணிக் கட்சி எம்.பி.யான நவாஸ் கனியை சமாதானம் செய்து அமர வைப்பார் என்று எதிர்பார்த்தால் சும்மா போயா அங்கிட்டு என வார்த்தையை விட்டிருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி, பதிலுக்கு தொலைத்துவிடுவேன் இதெல்லாம் என்கிட்ட காட்டாதே என ஆவேசம் ஆகியிருக்கிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களும், நவாஸ்கனி ஆதரவாளர்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் ஆட்சியர் தள்ளிவிடப்பட்டார். அது தனிக்கதை.
இதனிடையே இந்த விவரம் ஸ்குவாஷ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கொடுக்க புறப்பட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு வந்திருக்கிறது. அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடும் கோபம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவருக்கு டோஸ் விட்டதுடன் எச்சரிக்கையும் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூட திமுக அமைச்சருக்காக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் வயதான காலத்தில் கோவைக்கு பயணம் செய்து கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சியின் எம்.பி.யை அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications