பெட்ரோல் குண்டு வீச்சு.. பாஜக அலுவலகமாக மாறிய ஆளுநர் மாளிகை.. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுவதாக கூறினார். ஆளுநர் மாளிகை பாஜக அலுவலமாக மாறியிருப்பது வெட்கக்கேடு என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை யொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பிரமாண்ட முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பசும்பொன் சென்ற மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேவர் நினைவிடத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறினார். தேவரின் நூற்றாண்டு விழாவை திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது அரசு விழாவாக கொண்டாடப்பட்டதாக கூறினார். மண்டபங்கள் கட்டப்பட்டது. 25 லட்ச ரூபாய் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
புதிதாக இரண்டு மணி மண்டபங்கள் கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்கத்தேவரின் பெயரில் கல்லூரி அமைய காரணமாக இருந்தது கருணாநிதிதான்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இட ஒதுக்கீடு உருவாக்கியவர் கருணாநிதி. வீரராக பிறந்து வீரராக வாழ்ந்து வீரராக மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகும் இன்றைக்கும் போற்றப்படுகிறார். திமுக சார்பில் அரசின் சார்பில் வாழ்க பசும்பொன் தேவர் புகழ் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகைக்கு வெளியில் தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகியாக மாறி விட்டார் ஆளுநர். ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி விட்டது வெட்கக்கேடு என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் பசும்பொன் கிராமம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளில்லா விமானம், உயர் கோபுரங்கள், ரோந்து வாகனங்கள் என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பசும்பொன் கிராமம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications