பிரதமர் மோடி கொடுத்தது எல்லாம் வாக்குறுதிகள்னா நினைச்சீங்க.. அது “வடை”.. தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!
ராமநாதபுரம்: பிரதமர் மோடி தேர்தலின் போது மக்களுக்குத் தருவதெல்லாம் வாக்குறுதிகள் அல்ல, வடைகள் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - பாசிசம் வீழட்டும் - இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திமுகவின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடத்த நினைக்கும் பா.ஜ.கவின் கனவு இங்கு பலிக்காது.
புதிய கல்வி கொள்கை மூலம் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் செய்கிறது பாஜக. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும். அனைத்தையும் அதானிக்கு தாரைவார்த்து விட்டார் பிரதமர் மோடி. எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம். ஆனால், அதைவிட தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். இனிமேல், அனைத்து கழக நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும்.
2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். அவை வாக்குறுதிகள் அல்ல வடைகள். கடலில் மீன்கள் எங்கு உள்ளது என்று செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்படும் என்று பிரதமர் மோடி வடை சுட்டார். ஆனால், மீனவர்கள் கடலில் எங்கு உள்ளனர் என இலங்கை தெரிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு செய்துவிட்டது.
பாஜக ஆட்சியில் தான், வட மாநிலத்தில் ஒரு கி.மீ தூர சாலைக்கு ரூ.125 கோடி செலவிட்டார்கள். அதிமுகவை விரட்டியது போல் அவர்களின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. மதுரை எய்ம்ஸுக்கு வந்தது ஒரு செங்கல் மட்டும் தான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை.
தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வில் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. வெள்ள நிவாரணத்துக்கு மத்திய பாஜக அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வெள்ள பாதிப்புக்கு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை. நாம் செலுத்திய வரிப் பணத்தைதான் கேட்கிறோம்.
ஏழையாக பிறந்து ஏழையாக வளர்ந்தவர் என கூறும் பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் அனைவரையும் ஏழையாக மாற்றிவிட்டார். ஏழை என்று கூறும் பிரதமர் மோடியின் நண்பர் யார் என்றால் உலக பணக்காரர் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ள அதானி. மோடி இந்தியாவில் இருப்பதை விட வெளி நாடுகளில் தான் இருப்பர். அப்போது அவர் விமானி இல்லாமல் கூட பயணிப்பார். ஆனால் அதானி இல்லாமல் பயணிக்க மாட்டார்.
மொழி உரிமை - நிதி உரிமை - கல்வி உரிமை என ஒவ்வொரு உரிமையாகப் பறித்து வரும் பாசிஸ்ட்டுகளையும், உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் வீழ்த்துவதற்கான ஜனநாயக வாய்ப்பே இந்த மக்களவைத் தேர்தல். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்வோம்” என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications