ராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் விறுவிறுப்பு - தலைமுறைகளை தாண்டி வரலாறு பேசும்

ராமேஸ்வரம் - பாம்பன் கடல் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் பாலம் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் 99 தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்திற்கும், கப்பல்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் - பாம்பன் கடல் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் பாலம் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் 99 தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்திற்கும், கப்பல் செல்லும் போது திறந்து மூட வசதியாக, 63 மீட்டர் நீளத்திற்கு தூக்குபாலம் அமைக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன.

ரமேஸ்வரம் இந்துக்களின் புண்ணிய பூமி. ராமேஸ்வரத்தில் பிறந்து இந்த நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் மக்கள் ஜனாதிபதி ஏபிஜெ. அப்துல்கலாம். ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் இப்போது அப்துல்கலாம் நினைவிடத்திற்கும் சென்று வணங்கி வருகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரத்திற்கு மற்றுமொரு சிறப்பு பாம்பன் ரயில்பாலம். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று இந்த பாம்பன் ரயில் பாலம்.

ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட அந்த ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக சேவையாற்றி வருகிறது. 105 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து புதிய ரயில் பாலம் அமைக்க, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கின. கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாலம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் பாலத்தின் கிழக்கு பகுதியில் மண் ஆய்வு பணி துவங்கியது. இதை அடுத்து தற்போது பாலம் அமைக்க ராட்சத இயந்திரங்கள் மூலமாக கடலுக்குள் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய ரயில் பாலங்களின் ராணி

இந்திய ரயில் பாலங்களின் ராணி

இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு உண்டு. சுமார் 2.3 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலம். இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர். பாக் ஜலசந்தி கடல் பகுதியையும், மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாகும்.

சிங்களத்தீவுக்கு பாலம்

சிங்களத்தீவுக்கு பாலம்

இலங்கைக்கான வர்த்தக தொடர்புகளை எளிதாக்கும் விதத்தில் ராமநாதபுரம் மாவடத்திலுள்ள மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் விதத்தில் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயர்கள் கட்டியிருக்கின்றனர். மண்டபத்திலிருந்து, ராமேஸ்வரம் தீவிற்கும், பின்னர் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் இடையிலான பாலத்திற்கு ரூ.299 லட்சம் அந்த காலத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

ரூ.70 லட்சம் செலவில் ரயில் பாலம்

ரூ.70 லட்சம் செலவில் ரயில் பாலம்

திட்ட செலவு மிக அதிகம் என்று கூறி, அந்த திட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில், மண்டபம் - ராமேஸ்வரம் தீவு இடையிலான திட்டத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்ற அனுமதியளித்தது. அதன்பின்னர், பாம்பன் ரயில் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் 1902ம் ஆண்டு துவங்கியது.

நூற்றாண்டுகளை கடந்த பாலம்

நூற்றாண்டுகளை கடந்த பாலம்

1911ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தீவிரமானதுடன், விரைவாக இந்த ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மிகச் சிறப்பான திட்டமிடல் காரணமாக, குறுகிய காலத்தில் இந்த பொறியியல் அற்புதத்தை உருவாக்கினர். நூற்றாண்டை கடந்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சேவையாற்றி வரும் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த ஜெர்மனி நாட்டு பொறியாளர் ஷெர்சர் என்பவர்தான் தலைமை பொறியாளராக செயல்பட்டார். அவரது நினைவாக, தூக்கு பாலத்தை ஷெர்ஷர் ஸ்பேன் என்று அழைக்கின்றனர்.

ராமேஸ்வரத்திற்கு அகல ரயில்பாதை

ராமேஸ்வரத்திற்கு அகல ரயில்பாதை

மீட்டர்கேஜ் எனப்படும் குறுகிய ரயில் பாதையாக இருந்த பாம்பன் ரயில் பாலம், 2007ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது, பாலத்தின் உறுதித்தன்மையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து உள்ளது.

100 டன் தூக்குப்பாலம்

100 டன் தூக்குப்பாலம்

பாம்பன் ரயில் பாலத்தின் முக்கிய சிறப்பு, கப்பல்கள் செல்வதற்கு வசதியாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தூக்கு பாலம். இரண்டு பிரிவாக தூக்கும் இந்த பாலத்தின் ஒவ்வொரு பக்க இரும்பு பாலமும், 100 டன் எடை கொண்டது. இந்த தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கும் பணிகளுக்கான சிறப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மாதத்திற்கு 10 கப்பல்கள் வரை இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே, தூக்குப் பாலம் திறக்கப்படும். அந்த நேரத்தில் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும்

99 தூண்கள் தாங்கி நிற்கும்

99 தூண்கள் தாங்கி நிற்கும்

இந்த ரயில்பாலம் நூற்றாண்டுகளைக் கடந்து சேவை செய்தாலும், அதன் உறுதித்தன்மை குறைந்து வருவதாக பலரும் சொல்லவே,
ராமேஸ்வரம் பாம்பன் கடல்பகுதியில் புதிய ரயில் பாலம் அமைக்க 250 கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 60 அடிக்கு ஒரு தூண் என மொத்தம் 99 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

என்னென்ன வசதிகள்

என்னென்ன வசதிகள்

இந்தத் தூண்களுக்கு இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட உள்ளன. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. சுமார் 27 மீட்டர் உயரம் கொண்ட 63 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்தத் தூக்குப் பாலத்தின் வழியாக பெரிய மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும். இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம், ஜெனரேட்டர் மற்றும் மனிதர்களாலும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பெருமை பேசும்

தமிழகத்தின் பெருமை பேசும்

கொரோனா வைரஸ் தொற்றால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பாலத்தின் கிழக்கு பகுதியில் மண் ஆய்வு பணி துவங்கியது. இதை அடுத்து தற்போது பாலம் அமைக்க ராட்சத இயந்திரங்கள் மூலமாக கடலுக்குள் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் புதிய பாலத்தின் பணிகளில் 200 முதல் 600 தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பாலம் கட்டுமானப்பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பாலமும் தலைமுறைகளை கடந்து நூற்றாண்டுகளை கடந்து தமிழகத்தின் பெருமை பேசும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+