பரமக்குடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு! ராமநாதபுரத்தை ஆடிப்போக வைத்த சம்பவமாச்சே
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் அதிமுக நகராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் மீதான வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றம் இன்று அதாவது நவம்பர் 21-ம் தேதி இறுதி தீர்ப்பினை வழங்க உள்ளது. கிட்டத்தட்ட 20 மாதங்களாக தொடரும் இந்தச் சட்டப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதுமே எழுந்துள்ளது.
2022--23ம் ஆண்டு நடந்த சம்பவம் இதுவாகும்.. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார் அந்த 15 வயது சிறுமி.

அதே பரமக்குடியில் வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக இருந்தவர். மாணவிக்கு படிப்புக்கு உதவி செய்வதாக ஆசை வார்த்தை சொல்லி உள்ளார்.. நம்பிக்கையுடன் சென்ற மாணவியை, சிகாமணி மற்றும் அவரது நண்பர் ராஜா முகமது (36) இருவரும் காரில் கடத்தி சென்றுள்ளனர்.
மாணவி பாலியல் பலாத்காரம்
பிறகு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளனர்.. அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது, பிரபாகரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொடிய செயல்களுக்கு உடந்தையாக அன்னலட்சுமி என்ற உமா (34) மற்றும் கயல்விழி (45) என்ற 2 புரோக்கர்களும் செயல்பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மாணவி தனது பெற்றோரிடம் கதறி அழுது உண்மையைச் சொல்ல, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் தீவிரம்
வழக்கின் தீவிரத்தைக் கருதி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிக்கை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, ராமநாதபுரம் போக்சோ கோர்ட்டில் சிகாமணி ஜாமீன் பெற்றார். அதனை எதிர்த்து சிபிசிஐடி மதுரை ஹைகோர்ட்டில் மனு செய்தநிலையில், அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. உடனே இதனை எதிர்த்து சிகாமணி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்..
இதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு சரிதான் என்றும், வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி, 5 மாதத்தில் முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.
ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இதுவரை 45 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிவடைந்துவிட்டன.
இன்றைய தினம் தீர்ப்பு
தீர்ப்பை எதிர்பார்த்து சிபிசிஐடி போலீசாரும் கடந்த 18ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். ஆனால், வழக்கின் ஆவணங்கள் சரி பார்த்தல், குறியிடுதல் போன்ற காரணங்களுக்காக தீர்ப்பை நவம்பர் 21க்கு நீதிபதி புஷ்பராணி ஒத்தி வைத்தார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பமும், பொதுமக்களும் நீதி மன்றத்தை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications