22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை- ராமேஸ்வரத்தில் இன்று முதல் வேலை நிறுத்தம்!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் 22 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் 507 விசைப் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு எல்லைப் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமை இடங்களில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழ்நாட்டு மீனவர்களை துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது. இதனால் நடுக்கடலில் உயிரைக் கையில் பிடித்தபடி தமிழ்நாட்டு மீனவர்கள் படகுகளை கரையை நோக்கித் திருப்பிக் கொண்டிருந்தனர். இதில் சற்று தாமதமான நிலையில் 22 தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 22 தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படை பொய் வழக்கு போட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது. இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்கவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
துரை வைகோ அறிக்கை: இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கடற்படையினால் இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இன்று கைது செய்யப்பட்டதோடு அவர்களின் மூன்று விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல, கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 வரை, 150 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு மட்டும் 40 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, 4 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது. தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்து வருவதால்தான் எந்தவித அச்சமும் இன்றி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றார்கள்.
மத்திய பாஜக அரசு இப்பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் மத்திய அரசிற்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications