அதே இடம்.. '5 மணி நேரம்'.. ஓபிஎஸ்க்கு போட்டியாக யாகம் நடத்திய ஆர்பி உதயகுமார்..? என்ன திட்டம்!
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் பூஜைகள் நடத்தி யாகம் செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரும், யாகம், பூஜை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் ராமேஸ்வரத்தில் யாகம் நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஆர்பி உதயகுமாரும் ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் சென்று சிறப்பு யாகம் நடத்தியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் எத்தனை காசிக்குப் போனாலும் அவர் செய்த பாவம் கழியாது என விமர்சித்த ஆர்பி உதயகுமார், ஓபிஎஸ் சென்ற 3 நாட்களிலேயே ராமேஸ்வரத்துக்குச் சென்று யாகம் நடத்தியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஓபிஎஸ் வீட்டில் ஏன் ரெய்டு நடக்கல..? 'கையெழுத்து போட்டதே அவர்தானே?’.. கொளுத்திப்போட்ட உதயகுமார்!
ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில், இனி யார் கை ஓங்கும் என இரு தரப்பினரும் தவியாய் தவித்தபடி இருக்கின்றனர். இதற்கிடையே, தங்களுக்குச் சாதகமான பலன்களைப் பெற டெல்லியில் காய்நகர்த்தல்களைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டார்.
ராமேஸ்வரம் காசி விசிட்
எடப்பாடியின் டெல்லி பயணம் ஒருபுறம் இருக்க, குடும்பத்துடன் ராமேஸ்வரம், காசி என ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் ஓபிஎஸ். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் தமது குடும்பத்தினருடன் ஓபிஎஸ் பங்கேற்றார். நவகிரக ஹோமம், கோயில் மூலவருக்கு ருத்ராபிஷேகம் ஆகியவற்றை நடத்தினார் ஓபிஎஸ். ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் சுமார் 5 மணி நேரம் சிறப்பு யாகம் நடத்தினார் ஓபிஎஸ். ராமேஸ்வரத்தை அடுத்து, குடும்பத்துடன் வாரணாசிக்குச் சென்றார்.
மீண்டும் கை ஓங்குமா?
ஓ.பன்னீர்செல்வம் இந்த யாகத்தை நடத்துவதன் விளைவாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி அதிமுகவில் மீண்டும் செல்வாக்கைப் பெறலாம், சட்டப் போராட்டங்களில் வெற்றி காணலாம் என அவருக்கு ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுறுத்தியதன்படியே இந்த சடங்குகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் மீண்டும் அவர் கை ஓங்குமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அப்படியே ஜெ வழியில்
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பூஜைகள், யாகங்கள் செய்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தேர்தல் வெற்றிக்காகவும், தனக்கு எதிரான ஆபத்துகள் நீங்கவும் அவர் பலமுறை பூஜைகள், யாகங்களைச் செய்துள்ளார். அவரது வழியில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அவ்வப்போது யாகங்கள், பூஜைகளை நடத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியும் பூஜைகளை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
ஆர்பி உதயகுமார் யாகம்
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஆர்பி உதயகுமாரும் ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் சென்று சிறப்பு யாகம் நடத்தியுள்ளார். நேற்று இரவு ராமேஸ்வரம் சென்ற உதயகுமார் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் குடும்பத்துடன் நீராடியுள்ளார். தொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
போட்டி யாகம்?
பின்னர் ராமேஸ்வரம் மேல தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் குடும்பத்துடன் சிறப்பு யாகம் நடத்தினார் உதயகுமார். 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த யாகம் நடந்ததாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் யாகம் நடத்திய நிலையில், அங்கேயே சென்று ஆர்பி உதயகுமாரும் பூஜை, யாகம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் vs உதயகுமார்
தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கைச் சரித்து அந்த இடத்திற்கு ஆர்பி உதயகுமாரை கொண்டு வரும் திட்டத்திலேயே ஓபிஎஸ் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அறிவித்தார் ஈபிஎஸ். ஆர்பி உதயகுமாரும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு போட்டியாக ராமேஸ்வரத்திலேயே சென்று ஆர்பி உதயகுமார் யாகம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.