அரசு பதவியில் இல்லாத என் பெயரையும் சொத்து குவிப்பு வழக்கில் சேர்த்தவர் கருணாநிதி! சசிகலா ஆதங்கம்
கமுதி: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் இறந்துவிட்டார், உடலை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்தார் என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க பதவியில் இல்லாத என்னையும் கருணாநிதி சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்த்தார் என்றும் சசிகலா குற்றம்சாட்டினார்.
கமுதியில் அவர் பேசுகையில், திமுகவில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார். அப்போது எல்லா சட்டசபை உறுப்பினர்களிடம், எம்ஜிஆர், "கருணாநிதிக்கு ஆதரவு கொடுங்கள். அவர் முதல்வராகட்டும்" என சொன்னார்.

அவர் சொன்னதன் பேரில் எம்எல்ஏக்கள், கருணாநிதியை முதல்வராக ஏற்றுக் கொண்டனர். இதற்கு காரணம் எம்ஜிஆர்தான். முதல்வர் சீட் கிடைத்ததும் கருணாநிதி, எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்.
கருணாநிதியை முதல்வராக்கிய எம்ஜிஆர்
அப்போது தனது ஆதரவாளர்களிடம் எம்ஜிஆர் என்ன சொன்னார் என்றால், "கருணாநிதி என்னை நீக்கிவிட்டார். நான் சினிமாவில் நடிக்கிறேன். நீங்கள் எல்லாம் உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள்" என்றார்.
ஆனால் அவர்கள் எல்லாம் எம்ஜிஆரை கட்சி ஆரம்பிக்குமாறு கேட்டனர். அப்போதுதான் அனகாபுதூர் ராமலிங்கம் என்பவர் எம்ஜிஆர் மீது அதிக பற்றுக் கொண்டவர், அவர் தான் ஒரு கட்சியை பதிவு செய்துள்ளேன். அதை நீங்கள் நடத்துங்கள் என்றார்.
1972 இல் நடந்தது என்ன
முதலில் 1972 ஆம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது வேட்பாளராக மாயத்தேவரை களம் இறக்கினார் எம்ஜிஆர். அந்த தேர்தலில் 2.65 லட்சம் வாக்குள் பெற்றார் மாயத்தேவர். சுயேச்சை சின்னமான இரட்டை இலையில் அவர் போட்டியிட்டு வென்றார்.
அதன் பிறகு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறை முதல்வரானார். ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தார். வெளிநாடு செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக்கி அரசியலில் இறக்கினார்.
ஜெயலலிதா பிரச்சாரம்
அப்போது ஜெயலலிதா, "எம்ஜிஆர் மீண்டு வருவார், மக்களை சந்தித்து நன்றி சொல்வார், என்னை நம்பி அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள்" என கேட்டார். ஆனால் கருணாநிதியோ, "எம்ஜிஆர் இறந்துவிட்டார். அவரை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள், ஜெயலலிதா பொய் சொல்கிறார்" என அவர் ஒரு பக்கம் பொய் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் கருணாநிதியின் பொய் பிரச்சாரம் எல்லாம் நீடிக்கவில்லை. எம்ஜிஆர் அந்த தேர்தலில் வென்று முதல்வரானார்.
பெங்களூர் சிறையில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த போது அதிமுக கொடியை என் காரில் கட்டக் கூடாது என பிரச்சினை செய்தார். ஆனால் நானோ, நீங்கள் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என கொடியை அகற்றாமல் வந்தேன்.
கைது செய்ய முயற்சி
ஒரு கட்டத்தில் ஓசூர் பார்டரில் என்னை கைது செய்ய முயன்றார்கள். அப்போதுதான் நான் கொடியை கழற்ற மறுத்து வேறு காரில் பயணித்தேன். கட்சியில் மூத்தவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டதால் கட்சி சரிந்து போய்விட்டது. இந்த உண்மையை எத்தனை நாட்களுக்கு மறைக்க முடியும்?
கட்சி பற்றி அக்கறை இல்லை
எடப்பாடி பழனிசாமியை பொருத்தமட்டில் கட்சி என்ன ஆனாலும் பரவாயில்லை, தான் மட்டும் பதவியில் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். இவரும் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. நானும் 9 ஆண்டுகள் பொறுமையாக இருந்தேன். கட்சியை ஒன்றிணைக்க முயன்றேன்.
10 முறை தோல்வி
இதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 10 முறை அதிமுக தோல்வி அடைந்தது. தமிழக மக்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஜெயலலிதா மீதும் என் மீதும் 13 வழக்குகளை திமுக போட்டது. அதில் 12 வழக்குகளில் நாங்கள் விடுதலையானோம். இந்த சொத்துக் குவிப்பு வழக்கு கேஸ் மட்டும்தான் இருந்தது. அதுவும் சாதாரணமான கேஸ்தான்.
பொய் கேஸ்
அரசாங்க பதவியில் இல்லாத என்னையும் அந்த வழக்கில் கருணாநிதி சேர்த்துவிட்டார். என்னதான் ஜெயலலிதா மீது பொய் கேஸ் போட்டாலும் மக்கள்
அவருக்குத்தான் ஆதரவு கொடுத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தார்கள். எனவே எனக்கு தமிழக மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications