ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம்.. 20 இடங்களில் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கி உள்ளது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.
மாநில அரசு இதுகுறித்து முடிவெடுக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம், இந்தத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது.
தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்ற வாதம் வைக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதல்கட்டமாக 20 இடங்களில் 3000 மீட்டர் ஆழம் வரை எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்த நிலையில், மாநில அரசு இதுகுறித்து முடிவெடுக்காத சூழலில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications