தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய விடமாட்டோம்: இலங்கை தமிழ் மீனவர்கள் திடீர் ஆவேசம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவிடமாட்டோம் என இலங்கை தமிழ் மீனவர்கள் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலே எல்லை தாண்டிவிட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையால் 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டும் நீதி கிடைக்கவில்லை.

தற்போதும் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது. இது ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 3-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்கள் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை தமிழ் மீனவர்கள் பேட்டி அளித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இலங்கை தமிழ் மீனவர்கள் கூறுகையில், யுத்தத்தால் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். எங்களால் இந்திய மீனவர்களைப் போல பெரிய படகுகளில் மீன்பிடிக்க இயலாது. ஆனால் எங்கள் நாட்டுக்குள் நுழைந்து எங்கள் வளங்களை இந்திய மீனவர்கள் அள்ளிக் கொண்டு போவதை நாங்கள் பார்த்துக் கொண்டும் இருக்க முடியாது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யவும் கூடாது. இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற அத்துமீறல் என கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications