"ஜெய் ஶ்ரீராம்.." ராமேஸ்வரத்தில் 3 முறை முழங்கிய பிரதமர் மோடி! அப்துல் கலாமின் பூமி என்றும் பெருமிதம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது ராம நவமி நாள் என்பதால் ஜெய் ஶ்ரீராம் என 3 முறை முழங்கி பிரமதர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.
இன்று ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. பாம்பனில் கடலுக்கு நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஜெய் ஶ்ரீராம்
தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். வணக்கம் என் அன்பு தமிழ் சொந்தங்களே எனக் கூறி உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி, தொடர்ந்து இந்தியில் உரையாற்றினார். இன்று ராமநவமி கொண்டாடப்படுவதால் ஜெய் ஶ்ரீராம் என 3 முறை முழங்கிய பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றினார்.
அப்துல் கலாம் பூமி
ரயில் மற்றும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டின் இணைப்புகளை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிதாகத் திறக்கப்பட்ட பாம்பன் பாலம் மூலம் தமிழ்நாடு மக்கள் பயனடைவார்கள் என்றார். பாம்பன் பாலத்திற்கான தேவை பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், அது இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் மூலம் வியாபாரம், பயணம் எளிமையாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ராமேஸ்வரம் என்பது அப்துல் கலாமின் பூமி என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், "10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் வீடுகள் மத்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சமூக கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்துள்ளோம். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பல லட்சம் பேருக்குச் சிகிச்சை தரப்பட்டுள்ளது.
மக்கள் மருந்தகம்
மக்கள் மருந்தகம் மூலம் மலிவு விலையில் மருந்துகள் வழங்கி வருகிறோம். மக்கள் மருந்தங்களில் சுமார் 80% தள்ளுபடி விலையில் மருந்துள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1400க்கும் அதிகமான மக்கள் மருந்தங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்குப் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன. மேலும், மருத்துவ படிப்பைத் தமிழ் மொழியில் வழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.. ஏழை மாணவர்கள் பலன் பெறும் வகையில் தமிழ் மொழியில் மருத்துவ பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். இதனை நாங்கள் தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்
மீனவர்கள்
தமிழகத்தின் மீன்வளத்துறை கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உதவி செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் மிகவும் கடினமாக உழைப்பார்கள். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3700 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும் 600 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் மீட்டுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் பிரதம மந்திரி மீன் வளத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து சில நேரங்களில் இங்குள்ள தலைவர்கள் கடிதங்கள் எழுதுவார்கள். அந்த கடிதம் தான் ஆங்கிலத்தில் இருக்கிறது என்றால் கையெழுத்தும் கூட ஆங்கிலத்தில் இருக்கிறது. கையெழுத்து கூட ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications