ராமநாதபுரத்தில் ’மாஸ்’ காட்டும் திமுக! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தென்மண்டல முகவர்கள் கூட்டம்
ராமநாதபுரம்: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் செல்கிறார். முதல்வராக மு.க ஸ்டாலின் பங்கேற்ற பிறகு அவர் ராமேஸ்வரம் செல்வது இதுவே முதல் முறையாகும். மு.க ஸ்டாலின் வருகையை ஒட்டி ராமநாதபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திமுக தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் தென் மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி பாசறைக் கூட்டத்திற்காக ராமநாதபுரம் தேவி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் அருகே பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பிற்பகலில் முதல்வர் மு.க ஸ்டாலின் மேடைக்கு வருகை தருகிறார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின், பேச உள்ளார். சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாசறைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சியினருக்கு காலை மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். முதல்வராக பங்கேற்ற பிறகு, மு.க ஸ்டாலின் ராமநாதபுரம் வருவது இதுவே முதல் முறையாகும். மதுரையில் இருந்து காரில் வரும் முதல்வரை வரவேற்க திமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து ராமநாதபுரம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள் எனத் தெரிகிறது.
இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, முதல்வர் மு.க ஸ்டாலின்,
ராமேசுவரம் சென்று, அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். நாளை காலை 10 மணி அளவில் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்நல மாநாடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் , திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications