ஹஜ் 2025: இந்த விதிகளை மீறினால் ரூ.22 லட்சம் அபராதம்.. ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கவனம்! சவுதி அதிரடி
ரியாத்: ஹஜ் யாத்திரையின் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட ஹஜ் விசாக்களை மட்டுமே வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சவுதி எடுத்து வருகிறது. இதற்கிடையே முறையான அனுமதியின்றி புனித யாத்திரை மேற்கொள்ள முயல்வோருக்குக் கடுமையான தண்டனைகளை சவுதி அரசு அறிவித்துள்ளது. நிபந்தனைகளை மீறுவோர் மட்டுமின்றி, அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் கடுமையான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல வேண்டும். அது முஸ்லீம்களின் கடமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் திரள்வதால் மோசமான சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க சவுதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஹஜ் பயணம்
குறிப்பாக ஹஜ் காலத்தில் அதிகப்படியான மக்கள் வருவதைத் தவிர்க்க சவுதி ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட விசாக்களை மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் இந்தியா, வங்கதேசம் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இதர விசாக்களை வழங்குவதையும் சவுதி நிறுத்தி வைத்துள்ளது. ஹஜ் பயணத்தின்போது கூட்டம் அதிகரித்து விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முறையான அனுமதியின்றிப் புனித யாத்திரை செய்வோருக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை சவுதி அறிவித்துள்ளது. ஏப்ரல் 29 (1 துல்-கீதா) முதல் ஜூன் 10 (14 துல்-ஹிஜ்ஜா) வரை இந்த அபராதங்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஹஜ் பயணத்தின் போது மெக்கா மற்றும் மதீனாவில் பல கோடி பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட விசா என ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு மட்டுமே ஹஜ் பயண விசா வழங்கப்பட்டுள்ளது. உரிய ஹஜ் விசா இல்லாமல், சாதாரண விசிட் விசாவுடன் புனித யாத்திரை செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி 20,000 சவுதி ரியால் (சுமார் ரூ.4.5 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்கா அல்லது அருகிலுள்ள புனிதத் தலங்களுக்குள் மட்டும் நுழைய அனுமதி கொண்ட சாதாரண விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எவ்வளவு அபராதம்
சாதாரண விசிட் விசா வைத்துக் கொண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உதவுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசிட் விசாக்களுக்கு விண்ணப்பித்தல், போக்குவரத்திற்கு உதவுவது அல்லது தங்குமிடம் வழங்குவது எனச் சட்டவிரோதமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள உதவுவோருக்கு 100,000 ரியால் (சுமார் ரூ.22.7 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும். எத்தனை நபருக்கு உதவுகிறார்களோ அதைப் பொறுத்து அபராதமும் அதிகரிக்கும்.
ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக ஹஜ் பயணம் மேற்கொள்வோரைத் தங்க வைப்பவர்களுக்கும் இதே ரூ.22.7 லட்சம் அபராதம் பொருந்தும்.
வாகனம் பறிமுதல் செய்யப்படும்
சட்டவிரோதமாக நுழைந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் நாடு கடத்தப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகள் சவுதியில் நுழையவும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஹஜ் விசா இல்லாமல் இருப்போரைப் புனிதத் தலங்களுக்கு ஏற்றிச் செல்வோருக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் குற்றவாளிகளுக்குச் சொந்தமானதாக இருந்தால் அது பறிமுதலும் செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பயணக் காலகட்டம் என்பது ஜூன் 4 முதல் ஜூன் 9 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்கனவே சவுதி செல்லத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் நேற்று லக்னோ மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் விமானங்கள் புறப்பட்டன.












Click it and Unblock the Notifications