அதென்ன "தூங்கும்" இளவரசர்? சவுதியின் கலீத்திற்கு 20 ஆண்டு நடந்தது என்ன! கோமாவுக்கு போக என்ன காரணம்?
ரியாத்: நேற்றைய தினம் சவுதியின் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்படும் இளவரசர் அல்வலீத் பின் கலீத் பின் தலால் அல் சவுத் நேற்று முன்தினம் காலமானார். இது சவுதி அரேபியா மட்டுமின்றி உலகெங்கிலும் பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இவரை ஏன் மக்கள் தூங்கும் இளவரசர் என அழைக்கிறார்கள்.. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சவுதியில் இப்போது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆட்சியே நடந்து வருகிறது. அதேநேரம் அவர்களின் குடும்பத்தில் முகமது பின் சல்மானை தவிரவும் கூட பல இளவரசர்கள் இருக்கிறார்கள். அப்படி அங்குள்ள இளவரசர்களில் ஒருவர் தான் அல்வலீத் பின் கலீத் பின் தலால் அல் சவுத். 36 வயதே ஆன இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

தூங்கும் இளவரசர் பெயர்க் காரணம்
இளவரசர் தலால் அல் சவுத் பொதுவாக 'தூங்கும் இளவரசர்' என்று அழைக்கப்பட்டார். இதற்குப் பின்னால் ஒரு சோகமான காரணம் இருக்கிறது. அதாவது 2005ஆம் ஆண்டில், அவர் தனது 15 வயதில் லண்டனில் உள்ள ஒரு ராணுவ அகாடமியில் படித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கார் விபத்தில் அவருக்கு மூளைக் காயம் ஏற்பட்டது.
20 ஆண்டுகளாக கோமா
அவருக்கு உடனடியாக உயர் சிகிச்சை வழங்கப்பட்டது. அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் சவூதி அரேபிய நாடுகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்தனர். இளவரசர் கலீத் கோமா நிலைக்குப் போனார். அவரை மீட்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இளவரசர் கலீத் கோமா நிலையிலேயே இருந்தார். எப்போதாவது சிறிய அசைவுகள் அவரது உடலில் தென்படும். அது அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால், அதன் பிறகு எதுவுமே இருக்காது.
தந்தையின் நம்பிக்கை
இந்தக் கடினமான நேரத்திலும் கூட அவரது தந்தை கலீத் பின் தலால் முழு நம்பிக்கையுடன் இருந்தார். நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்ததால், வென்டிலேட்டர் உதவியை அகற்றுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அதை அவரது தந்தை கடைசி வரை ஏற்கவே இல்லை. எப்போதும் அதற்கு, "எனது மகன் உயிரிழக்க வேண்டும் என இறைவன் விரும்பி இருந்தால் அது விபத்திலேயே நடந்திருக்கும்.. நாம் இதைச் செய்யக்கூடாது" என்பதே எப்போதும் அவரது பதிலாக இருந்துள்ளது.
உயிரிழப்பு
இளவரசர் கலீத் அவ்வப்போது சிறிய அசைவுகளைக் காட்டும் போது அதை வீடியோவாக எடுத்து குரான் வாசங்களுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிர்வார். அது பல லட்சம் மக்களின் இதயங்களைத் தொட்டன. பலரும் இளவரசர் கலீத் மீண்டு வர வேண்டும் என விரும்பினர். ஆனால், அது நடக்கவில்லை. 20 வருடங்கள் கோமா நிலையிலேயே இருந்த தூங்கும் இளவரசர் ஜூலை 19ம் தேதி உயிரிழந்தார்.
தனது மகனின் மரணச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட தந்தை கலீத் பின் தலால், குர்ஆன் வாசகத்துடன் மகன் மறைந்த செய்தியைச் சோகத்துடன் பகிர்ந்து கொண்டார். நேற்றைய தினம் இளவரசர் கலீத் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மேலும், அடுத்த 3 நாட்கள் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. சவுதி மட்டுமின்றி உலகெங்கும் பலரும் மறைந்த இளவரசர் கலீத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications