அதே மாதிரி ஓட்டை.. மிளகாய் தூள்.. பக்கா பிளான்.. இம்முறை நகை கடை இல்லை.. ஓனர் வீட்டில்!
சேலம் நகை கடை அதிபர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது
சேலம்: சுவற்றில் அதே மாதிரி ஓட்டை.. மிளகாய்தூள்.. என கனகச்சிதமான கொள்ளை நடந்துள்ளது.. ஆனால், நகை கடையில் இல்லை.. நகை கடை அதிபர் வீட்டுக்குள்ளேயே இந்த துணிகரம் நடந்துள்ளது.. கிட்டத்தட்ட ஏழரை கிலோ நகை கொள்ளை போனதாக கூறப்படுகிறது.
சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன். இவருக்கு சொந்தமாக சேலத்தில் 3 நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
சேலம் டு ஓமலூர் மெயின் ரோட்டில் குரங்குசாவடி பகுதியில் திவ்யம் ஜூவல்லர்ஸ் கடையும், நகைக்கடை வளாகத்தில் சீனிவாசனின் மூன்றாவது மகன் ஶ்ரீ பாஷ்சியத்தின் வீடும் உள்ளது.

மர்மநபர்கள்
இவரது வீட்டுக்குள் அதிகாலை மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.. 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் இந்த வீட்டை சுற்றி இருக்கும்.. சிசிடிவி கேமிராக்களும் ஏராளமாக பொருத்தப்பட்டிருக்கும்.. வீட்டின் பின்பக்க கதவில் ஓட்டை போட்டு உள்ளே சென்றுள்ளனர்.. அறையில் இருந்த லாக்கரை உடைத்து, வெள்ளி, தங்கம், பிளாட்டின நகைகளை ஒன்றுவிடாமல் அள்ளி கொண்டு போயிருக்கிறார்கள்.

சிசிடிவி கேமிரா
கொள்ளை அடித்தவர்கள் வீட்டில் இருந்த அலாரத்தை ஆஃப் செய்துள்ளனர்.. சிசிடிவி கேமரா ஒயர்களை துண்டித்துள்ளனர்.. இதன்பிறகுதான் வீட்டிற்குள்ளேயே நுழைந்துள்ளனர். நகையை கொள்ளை அடித்த அந்த ரூம் முழுவதும் மர்மநபர்கள் மிளகாய் தூளை தூவி விட்டு போயிருக்கிறார்கள்.

கடை ஓனர்
இந்த கொள்ளை குறித்து கடை ஓனர் போலீசுக்கு தகவல் சொல்லவும், சேலம் எஸ்பி செந்தில்குமார் மற்றும் சூரமங்கலம் போலீஸார் விரைந்து வந்தனர்.. தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு, விசாரணை நடக்கிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வீட்டு வேலையாட்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வைர நகைகள்
இந்த துணிகரம் பற்றி கமிஷனர் செந்தில்குமார் சொல்லும்போது, குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 25 லட்சம் ரூபாய் பணமும் மற்றும் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதிர்ச்சி
ஏழரை கிலோ நகைகள் மொத்தமாக கொள்ளை போனதாகவும், 4 கிலோ நகைகள், 300 சவரன் நகைகள் கொள்ளை போனதாகவும் சொல்கிறார்கள்.. எனினும் கொள்ளை போன மொத்த நகைகளின் மதிப்பு முழுமையாக தெரியவில்லை. சேலம் மாநகரிலேயே இப்படி ஒரு துணிகரம் நடந்துள்ளது மாவட்ட மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications