லாரி - பஸ்ஸுக்கு இடையே நசுங்கி 5 பேர் பலி.. சேலம் அருகே கோர விபத்து.. நிவாரணம் அறிவித்த முதல்வர்!
சேலம்: சேலம் அருகே நேற்று காலை தனியார் பேருந்து, பைக்குகள் மீது மோதியதில் முன்னால் சென்ற லாரிக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள பூவனூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு நேற்று காலையில் சென்றுள்ளார். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்த முருகன், அவரது மனைவி நந்தினி. இவர்களின் மூன்று வயது மகன் கவின், இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, சுக்கம்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்திற்கு முன்னால் ஒரு லாரி சென்றுள்ளது. வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர் லாரியின் வேகத்தை குறைத்த போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் லாரியின் மீது மோதியது. அப்போது ஆச்சாங்குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வேகமாக வந்து இரண்டு இரு சக்கர வாகனத்திற்கும் பின்னால் மோதியது.
இதில் பேருந்துக்கும், லாரிக்கும் இடையே நசுங்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கவின் என்ற மூன்று வயது சிறுவன் மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் வேதவள்ளியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பேருந்தில் வந்த பத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் அரூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள சுக்கம்பட்டி கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நடந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன். விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications