திமுகவின் பி டீம்.. செங்கோட்டையனை நீக்கியது ஏன்? எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்!
சேலம்: அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு நான் தான் பொறுப்பும், அமைச்சரவையில் இடமும் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் செங்கோட்டையன், துரோகத்திற்கு என்று ஒரு நோபல் பரிசு வழங்கினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த நிலையில் செங்கோட்டையனை நீக்கியது தொடர்பாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு வந்தார். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அது அதிமுகவால் நடத்தப்படவில்லை.
கட்சி சார்பற்ற விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறாக கருத்தை கூறினார் செங்கோட்டையன். அதன்பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கியபோது அவர் ஏற்கவில்லை. அந்த நேரத்தில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின், கருணாநிதி படம் தான் இடம்பெற்றிருக்கிறது. அதனால்தான் திமுகவின் பி டீம் என்கிறோம்.
சட்டசபையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. அதேபோல் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இல்லை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது செங்கோட்டையனுக்கு தெரியும். செங்கோட்டையனை நீக்கியது நான் எடுத்த தனிப்பட்ட நடவடிக்கை என்பது போன்று பேசக் கூடாது.
செங்கோட்டையனை அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமான இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? நான் முதல்வரான பின்னர் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் நியமித்தேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications