துணை முதல்வர் பதவி தரலாம்.. ஆனா திமுகவில் வேற ஆளே இல்லையா? எடப்பாடி பழனிசாமி தாக்கு!
சேலம்: ஸ்டாலின் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது ஏற்புடையதல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒருங்கிணைப்பின் பேரில் நாகப்பட்டினம் பாங்கல் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் நேதாஜி உள்ளிட்ட 160 பேர் திமுகவில் இருந்து விலகி இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ஸ்டாலின் மகனுக்கு: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், "குடும்ப கட்சியாக உள்ள திமுக குடும்ப ஆட்சி நடத்தி வருகிறது. துணை முதல்வர் பதவியை ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல. திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது." எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் ஏராளமானோர் மலிவு விலையில் உணவு அருந்தி வருகின்றனர். அப்படிப்பட்ட அம்மா உணவகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சரியான முறையில் செயல்படவில்லை. தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் தரமான உணவு தயாரித்து ஏழை எளியவருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அம்மா உணவக ஆய்வு இதனால் தான்: சென்னையில் 47 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. திமுக பொறுப்பேற்ற பிறகு 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து சோதனை செய்தார். அந்த சோதனையை மூன்றாண்டு காலம் ஏன் செய்யவில்லை. இந்த திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை.
அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு தற்போது ஆய்வு நடைபெற்று இருக்கிறது. அம்மா உணவகத்தின் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏழை எளிய மக்கள் சரியான உணவு கிடைக்காததால் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏழை எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனை அறிந்த பிறகு தமிழக முதல்வர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்." என விமர்சித்துள்ளார்.
போலீசாருக்கு சுதந்திரம் இல்லை: மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகம் கொலை நகரமாக மாறி உள்ளது வேதனைக்குரியது. காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்படாத காரணத்தினால் இத்தகைய விளைவு ஏற்பட்டுள்ளது.
கஞ்சா போதையில் ஏற்படும் கொலைகள் அதிகம். கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை. பள்ளி கல்லூரி அருகில் கூட கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. கல்வி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் ஆய்வு செய்து கஞ்சா விற்பவர்களை கண்டுபிடித்து சட்டரீதியாக தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த முடியும் இல்லையென்றால் மாணவர்கள் சீரழிந்து விடுவார்கள்.
ஆக்ஷன் இல்லை, வெறும் அறிக்கை தான்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தானாக முன்வந்து சரணடைந்த நபர் திட்டமிட்டு என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை கையில் விலங்கு அணியாமல் அழைத்துச் சென்றது ஏன் போன்ற பல்வேறு சந்தேகங்கள் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது.
கள்ளச்சாராய மரணங்களுக்கு பிறகு இந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக வெறும் அறிக்கை மட்டுமே வருகிறது. தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications